எம்.எல்.ஏ.வாக இருந்தால் எங்களுக்கு என்ன..? ரூ.500 அபராதம் கட்டுங்க..!
ஒடிஸா: புவனேஸ்வரில் விதிமீறலில் ஈடுபட்ட ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. அனந்த் நாராயணன் ஜேனாவுக்கு போக்குவரத்துக்காவலர் ரூ.500 அபராதம் விதித்து தனது கடமையை ஆற்றியுள்ளார்.
புவனேஸ்வர் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனந்த நாராயணன் ஜேனா. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் மூத்த சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் கூட. இந்நிலையில் அவரிடமே போக்குவரத்துக்காவலர் ஒருவர் துணிச்சலாக அபராதம் செலுத்தக் கூறியது காவல்துறைக்கு அம்மாநிலத்தில் உள்ள சுதந்திரத்தை எடுத்துக்காட்டுகிறது.
நம்மூரில் கட்சிக்கொடி கட்டிய வாகனங்களை கண்டாலே போக்குவரத்துக்காவலர்கள் அதை நிறுத்த தயங்கும் நிலை உள்ளது. அப்படியே நிறுத்தினால் கூட, அந்த வாகனத்தில் இருக்கும் நபர்கள் நான் யாருன்னு நினைச்சீங்க எனக்கேட்டு யாருக்காவது போனை போட்டு போக்குவரத்துக்காவலரிடம் கொடுப்பார்கள்.
பணமிருந்தும் பவுசு காட்டாத பி.டி.ஆர்.வாரிசு..! நண்பர்களுக்கு எளிமையாக விருந்து..!
இந்நிலையில் ஒடிசாவில் போக்குவரத்துக்காவலர்கள் அபராதம் செலுத்தக்கூறியதும், ஆட்சேபனை ஏதும் தெரிவிக்காமல், முதல்வருக்கு நெருக்கமாக இருந்தாலும் கூட அபராதத் தொகையான ரூ.500 ஐ செலுத்தி ரசீது பெற்றுச் சென்றுள்ளார் அனந்த நாராயணன் ஜேனா எம்.எல்.ஏ.
இது தொடர்பாக அம்மாநில ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனது ஓட்டுநர் செய்தது தவறு தான் என்றும், நோ பார்க்கிங் என்ற இடத்தில் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதால் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.