என்னங்கடா இது! கள்ளு குடிச்சா கொரோனா போயிரும்னு பச்சை பிள்ளைகளுக்கு ஊத்துறீங்களேடா!
மல்காங்கிரி: கொரோனாவை தடுப்பதற்கு உலக நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில்தான் இந்தியாவில் விதம்விதமான வினோதமான நடவடிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
உலக நாடுகளை இதுவரை இல்லாத வகையில் பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது ஆட்கொல்லி கொரோனா நோய். கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுதலையாக உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க பெரும் போராட்டம் நடத்துகின்றன.
கொரோனா தடுப்பு மருந்துகள் நடைமுறைக்கு வர இன்னமும் சில மாதங்களாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு வகையான மருந்துகள் கொரோனாவுக்காக பரிந்துரைக்கப்பட்டு அவை சர்ச்சைகளாக வெடித்திருக்கின்றன.
கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியுமா? யாரும் சொல்லாத மருத்துவ விளக்கம்
ஒடிஷாவின் மல்காங்கிரி
இதனிடையே ஒடிஷாவின் மல்காங்கிரி மாவட்டத்தில் மண்ணின் ஆதிகுடிகளான பழங்குடிகள் கொரோனாவிடம் இருந்து விடுதலையாக கடைபிடித்த முறைதான் இப்போது பஞ்சாயத்தாகி உள்ளது. ஒடிஷாவின் கோரபுட், மலாங்கிரி, ராயகடா உள்ளிட்ட மலைகளின் பழங்குடிகள் மலேரியாவால், வறுமையால் செத்து மடிந்த பேரவலம் நிகழ்ந்திருக்கிறது.
போண்டா பழங்குடிகள்
இந்தியாவின் அழிந்துவரும் போண்டா பழங்குடி மக்களும் இந்த மலைப் பகுதிகளில்தான் வசிக்கின்றனர். ஆகையால் கொரோனா தொற்று நோயிடம் இருந்து இந்த மக்கள் எப்படி பாதுகாப்பார்களோ என்று பொது சிவில் சமூகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒடிஷாவின் ஆதிபழங்குடிகள் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கின்றனர்.
கொரோனாவுக்கு ஈச்சங்கள்
முககவசங்கள் அணியாமல் வழக்கம் போல மலைகாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே மல்காங்கிரி மாவட்டம் கிராமம் ஒன்றில் சிறுவர்களுக்கு ஈச்சங் கள்ளை கூட்டமாக அமர வைத்து ஊற்றுகிற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா எதிர்ப்பு சக்தியை ஈச்சங் கள் தரும் என்பது அவர்களது நம்பிக்கை. அதற்காகவே இதை மருந்தாக குழந்தைகளுக்கு கொடுத்திருக்கின்றனர்.
கோமிய சர்ச்சை
தற்போது இந்த வீடியோ குறித்து ஒடிஷா அரசு விசாரணை நடத்தி வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பசுவின் சிறுநீரான கோமியத்தை குடித்தாலே கொரோனா குணமாகும்; பசுவின் சாணத்தில் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடலாம் என்றெல்லாம் யோசனைகள் ஒருபக்கம் வலம் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.