15 நாட்களுக்கு முன் இறந்த நடிகை ஓஜா.. காதலரும் மர்ம மரணம்! நடிகைபோல் தூக்கில் தொங்கிய சடலம்
புவனேஷ்வர்: ஒடிசாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை ராஷ்மிரேகா ஓஜா மரணமடைந்த 15 நாட்களில் அவரது காதலரும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறார்.
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள நயாபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் 23 வயதான நடிகை ராஷ்மிரேகா ஓஜா.
அவருடன் சந்தோஷ் பாட்ராவி என்ற நபரும் அதே வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. பகீர் கிளப்பும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி!
ஓஜா மரணம்
இந்த நிலையில் 2 வாரங்களுக்கு முன்பு ஓஜாவின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. கதவின் உள்பகுதியும் தாழிடப்பட்டு இருந்ததால் வீட்டின் உரிமையாளர் சந்தேகம் அடைந்து உள்ளார். இதனை அடுத்து அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற போலீசார், வீட்டிற்குள் புகுந்து பார்த்தபோது ஓஜா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரது அறையில் கடிதம் ஒன்றையும் கண்டெடுத்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணத்தை ஓஜா தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளனர்.
காதலன் மரணம்
இதனை தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராஷ்மி ஓஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது மகளின் மரணம் குறித்து பேசிய நடிகையின் தந்தை, அவருடன் தங்கி இருந்த ஆண் நண்பர் சந்தோஷ் பத்ராவேதான் மரணத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று சந்தோஷ் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார்.
என்ன காரணம்?
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றினர். சந்தோஷ் மிகவும் நல்லவர் என்றும் அவரது மரணம் தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் வீட்டருகே வசித்து வந்த மக்கள் தெரிவிக்கின்றனர். சந்தோஷை ஓஜாவின் மரணத்துக்கு காரணம் என அவரது தந்தை குற்றம்சாட்டிய நிலையில், அவரும் காதலியை போன்றே தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
போலீஸ் விசாரணை
ஓஜா, சந்தோஷ் ஆகியோரின் மரணம் தற்கொலையா அல்லது ஓஜாவின் மரணத்தால் மனமுடைந்த சந்தோஷ் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சந்தோஷின் இறப்புக்கான காரணம் தெரியவந்தால் ஓஜா மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்பது போலீசாரின் நம்பிக்கை.