போபாலில் மாநகராட்சிக் கூட்டத்தின்போது ஆபாசப் படம் பார்த்த அதிகாரி.. சஸ்பெண்ட்!
போபால்: போபாலில், மாநகராட்சி அதிகாரி ஒருவர் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்ற போது, செல்போனில் ஆபாசபடம் பார்த்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் மாநகராட்சியின் 10வது மண்டல அதிகாரி அனில் சர்மா. இவர் கடந்த திங்களன்று மேயர் தலைமையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அதனைக் கவனிக்காமல் அனில் சர்மா, தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனை அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர் ஒருவர் கேமராவில் பதிவு செய்தார். பின்னர் இது செய்தியாகவும் ஒளிபரப்பானது.
அதனைத் தொடர்ந்து அனில் சர்மாவின் செயல் குறித்து மேலதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில், கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அனில் சர்மா ஆபாசப்படம் பார்த்தது உறுதி செய்யப்பட்டது.
குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து அனில் சர்மாவை சஸ்பெண்ட் செய்து உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.