அமெரிக்காவின் மிரட்டல்களை வரிசையாக புறக்கணிக்கும் இந்தியா.. திடீர் தைரியத்திற்கு காரணம் என்ன?
Recommended Video
டெல்லி: பல்வேறு தளங்களிலும், அமெரிக்காவின் எச்சரிக்கை, மிரட்டல்களை இந்தியா தொடர்ச்சியாக புறம் தள்ளி வருகிறது.
அமெரிக்க எச்சரிக்கையை மீறி, சக்தி வாய்ந்த S-400 வகை ஏவுகணைகளை வாங்க ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து, கமோவ் வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ஆயுதங்களை வாங்கவும் ஆர்வம் காட்டுகிறது.
இது மட்டுமா, ஈரானிடமிருந்து கச்சா எண்ணை இறக்குமதியை தவிர்க்க வேண்டும் என்ற அமெரிக்க எச்சரிக்கையையும் இந்தியா ஏற்கவில்லை. தனது எரிபொருள் பாதுகாப்பே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
[இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக உயரும் - ஐஎம்எஃப் கணிப்பு]
ஈரான் எண்ணை
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதால், அமெரிக்காவின் நட்பு நாடுகளையும், ஈரானை புறக்கணிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு இந்தியா உடன்படவில்லை. திடீரென இந்தியா, அமெரிக்காவிற்கு எதிராக, இவ்வளவு தைரியத்தை வெளிப்படுத்த என்ன காரணம்? முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சசாங் இதுபற்றி 'ஒன்இந்தியா' இணையதளத்தின் கேள்விக்கு பதில் அளித்தார்.
பெருமைப்பட எதுவும் இல்லை
சசாங் இதுகுறித்து கூறியதாவது: ஆயுத கொள்முதலோ, ஆயில் கொள்முதலோ.. இதில் பெருமைப்படவோ, அல்லது மற்றொருவர் மீது கரி பூசவோ தேவையில்லை. சீனாவிடம் இதேபோன்ற ஆயுதங்கள் உள்ளன. இந்தியாவை பாகிஸ்தான் தினம் தினம் அச்சுறுத்தி வருகிறது. கவுரி ஏவுகணை சோதனைக்கு பிறகு, இந்தியாவிடம் சரியான ஒரு பாதுகாப்பு கட்டமைப்பு தேவைப்பட்டது. எனவே ரஷ்யாவிடம் ஏவுகணையை வாங்க வேண்டிய தேவை எழுந்தது.
அமெரிக்காவால் முடியாது
அமெரிக்காவிடம் S-400 வகை பாதுகாப்பு கட்டமைப்பு இல்லை. அப்படியே அமெரிக்கா இந்தியாவிற்கு தர விரும்பினாலும், 10-15 வருடங்கள் ஆகும். ஆனால் அதற்குள்ளாக, இந்தியாவை பிற நாடுகளிடமிருந்து அமெரிக்கா தனிமைப்படுத்திவிடும். கச்சா எண்ணை விலை தொடர்பாக சவுதி அரேபியாவிற்கு, அமெரிக்கா நெருக்கடி கொடுத்து வருகிறது. சவுதி தனது கச்சா எண்ணை விலையை குறைத்துக்கொண்டால், ஆயில் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
எரிபொருள் தேவை
அமெரிக்க அரசு இந்தியாவிற்கு இந்த விஷயத்தில் உதவி செய்யவில்லை. இந்திய பொருளாதாரம் இப்போது உள்ள நிலையில், எரிபொருள் தேவைக்கு, வேறு எந்த முயற்சியையும் இந்தியாவால் எடுக்க முடியாது. எனவே அமெரிக்கா கோரிக்கைகளை புறம் தள்ளுவதை தவிர இந்தியாவிற்கு வேறு வாய்ப்பு எதுவும் கிடையாது.
வேறு வழி இல்லை
ரஷ்ய ஏவுகணையை கொள்முதல் செய்தால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியிருந்தாலும்கூட, இப்போது பொருளாதார தடை விதிக்க முடியாது. பணம் கொடுக்கும்போதுதான் விதிக்க முடியும். ரஷ்யாவிற்கான ஆயுத கொள்முதல் விலையை, இந்தியா பணமாகவே கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்தியா ராணுவ தளபதி பிபின் ராவத் இதை தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியாவிற்கு என்று சுதந்திரமான பாதுகாப்பு கொள்கை உள்ளது. எனவே கமோவ் ஹெலிகாப்டர்கள் உட்பட பிற ஆயுதங்களையும் வாங்க இந்தியா ஆர்வம் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.