ஓலா கால் டாக்சி டிரைவர் மீது தாக்குதல் நடத்திய ஆப்ரிக்கர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு
டெல்லி: டெல்லியில் நேற்று அதிகாலை ஆறுபேரை டாக்சியில் ஏற்ற மறுத்த ஓலா கால் டாக்சி டிரைவரை அடித்து உதைத்த ஆப்பிரிக்க நாட்டினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் மாணவரகள். அதில் சிலர் இணையதள மோசடி, போதைப் பொருள் விற்பனை, கற்பழிப்பு போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
சில நேரங்களில் அவர்கள் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. அதேசமயம் நம்மவர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த 3 வெவ்வேறு சம்பவங்களில் 6 ஆப்பிரிக்கர்கள் லேசான காயமடைந்தனர். அவர்களில் இருவர் உகாண்டா, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்கள். இரு நைஜீரிய ஆண்களும் காயமடைந்தனர்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில், காங்கோ இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அதேபோல ஹைதராபாத்தில் நைஜீரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இதனால் ஏற்பட்ட பரபரப்பை மேலும் அதிகமாக்கும் வகையில் 6 ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அமைந்தது.
இந்நிலையில் டெல்லி துவாரகா பகுதியில் வசித்து வரும் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள், ராஜ்பூர் செல்வதற்காக கால் டாக்சி புக் செய்தனர். தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவரான நூருதீன், அவர்களை அழைத்துச் செல்வதற்காக சென்றுள்ளார். ஆனால், ஒரு பெண் உட்பட ஆறு ஆப்ரிக்கர்கள் காரில் ஏற முயன்றுள்ளனர்.
டெல்லி போக்குவரத்து போலீசாரின் உத்தரவுப்படி நான்கு பேருக்கு மேல் காரில் ஏற்ற முடியாது என்று டிரைவர் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆப்ரிக்கர்கள், டிரைவர் நூருதீனைக் கடுமையாக தாக்கியதுடன் தப்பிச் சென்றனர். தலை மற்றும் முக்கத்தில் பலத்த காயமடைந்த அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி போலீசார், விசாரித்து வருகின்றனர்.