ஓலா டாக்சி நிறுவன சர்வர் ஹேக் ஆனது.. வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு விவரம் அம்பேல்?
டெல்லி: பிரபல டாக்சி சேவை நிறுவனமான 'ஓலா' இன்று ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டது. ஹேக்கர்கள் குரூப் ஒன்று, அதன் சர்வரை முடக்கி, வாடிக்கையாளர்களின் முழு விவரங்களையும் திருடிவிட்டதாக அறிவித்ததுதான் இந்த அல்லோகலத்துக்கு காரணம்.
ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் 'டீம்அன்நோன்' என்ற ஹேக்கர்கள் குரூப் வெளியிட்ட தகவலில், ஓலா நிறுவனத்தின் சர்வர்களை முடக்கி விட்டதாகவும், அதன் வாடிக்கையாளர்கள் பற்றிய முழு விவரமும் தங்கள் கைகளில் உள்ளதாகவும் கூறியிருந்தது. கிரெடிட் கார்டு, பண பரிமாற்ற ஹிஸ்ட்ரி மற்றும் பயன்படுத்தப்படாத வவுச்சர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தங்களிடம் உள்ளதாக அந்த ஹேக்கர்கள் கூறினர்.
இந்த தகவல் பரவ ஆரம்பித்ததும் வாடிக்கையாளர்களிடம் அச்சம் ஏற்பட்டது. ஆனால், யாரும் அச்சப்பட வேண்டாம் என்று ஓலா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓலா நிறுவனம், பயன்படுத்திய உள் சர்வர்தான் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
டம்மியான வாடிக்கையாளர்கள் விவரங்களை வைத்து, இந்த சர்வரில், டெஸ்ட் செய்து பார்ப்பது எங்கள் வழக்கம். அந்த சர்வர் ஹேக் செய்யப்பட்டதால் எந்த வாடிக்கையாளர் விவரமும் வெளியே போய்விடாது. வாடிக்கையாளர்கள் ரகசியங்களை பாதுகாப்பதே எங்கள் முதல் இலக்கு. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.