ஓலா, உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்... மும்பை மக்கள் கடும் பாதிப்பு!
ஓலா மற்றும் உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தால் மும்பை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை : ஓலா மற்றும் உபேர் கால் டாக்ஸி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பெருநகர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் கால் டாக்ஸி ஓட்டுநர்களிடம் மாதந்தோறும் 1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி செய்துள்ளன. ஆனால் ஓட்டுநர்களுக்கு உரிய லாபத்தை அந்த நிறுவனங்கள் உரியமுறையில் பங்கீட்டு தரவில்லை என குற்றம்சாட்டி ஓட்டுநர்கள் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த 2 நிறுவனங்களும் தாங்களே சொந்தமாக வைத்துள்ள டாக்ஸிகளுக்கே முன்உரிமை அளிப்பதாகவும், ஒப்பந்த முறையில் நிறுவனத்துடன் பணியாற்றும் கால் டாக்ஸிகள் இதனால் பாதிக்கப்படுவதாகவும் ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடன் பட்டு கார் வாங்கி ஓட்டும் தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் கடனை அடைக்க முடியாமல் கஷ்டப்படுவதாக ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மும்பை நகரில் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு நவ நிர்மான் சேனா ஆதரவு தெரவித்துள்ளது. இதனால் மும்பை நகரில் ஓலா கால் டாக்ஸி ஓடவில்லை. ஓலா சேவையை ஒப்பிடும் போது உபேர் சேவை கிடைப்பது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.
ஓலா, உபேர் டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டத்திற்கு மும்பை டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் உரிய நேரத்தில் டாக்ஸி கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனிடையே வேலைநிறுத்த அறிவிப்பை மீறி மும்பையில் ஓடிய கால்டாக்ஸி ஒன்றை மஹாராஷ்ரா நவநிர்மான சேனா கட்சித் தலைவர் அடித்து உடைத்துள்ளார். காரின் முகப்பு கண்ணாடியை அவர் உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்ததில் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.
#WATCH Mumbai taxi drivers strike: Maharashtra Navnirman Sena (MNS) leader Nitin Nandgaonkar breaks windshield of a taxi which was plying in the city pic.twitter.com/ZERyZXU68h
— ANI (@ANI) March 19, 2018
தனிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத் தலைவர்களுக்கு மும்பை போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் வேலை நிறுத்தத்தின் போது ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனறு அந்தேரி காவல் நிலைய ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.