முதியோர் ஓய்வூதியம், இளைஞர்களுக்கு வேலை, கிராம செயலகங்கள்.. ஜெகன் அதகள அறிவிப்பு
அமராவதி: ஆந்திரா முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி முதியோர் ஓய்வூதிய தொகை உயர்வு, கிராமப்புற இளைஞர்களுக்கு மாதம் ரூ5,000-ல் வேலைவாய்ப்பு என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
ஆந்திரா முதல்வராக இன்று ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொன்டார்.
இந்நிகழ்ச்சியில் தெலுங்கு மொழியில் ஸ்டாலின் உரையாற்றினர். மேலும் நெற்றியில் குங்குமத்துடன் ஸ்டாலின் உரையாற்றியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
யாராவது விபூதி, குங்குமம் வைத்தால் அதை அழித்துவிடும் ஸ்டாலின் நெற்றியில் பூசப்பட்ட குங்குமத்துடன் உரையாற்றியது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகாவும் மாறியிருக்கிறது.
இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் முதியோர் ஓய்வூதியத் தொகை, இலைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட கோப்புகளில் முதலில் கையெழுத்திடுவேன் என அறிவித்தார். ஜெகன் மோகன் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:
முதியவர்களுக்கான உதவித் தொகை ரூ3,000 வழங்கப்படும். ரூ2,250-ல் தொடங்கி 3 ஆண்டுகளில் இத்தொகை வழங்கப்படும்.
மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2-ந் தேதிக்குள் 1.6 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும். கிராமப்புற இளைஞர்களுக்கு அரசின் திட்டங்களை விளக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்காக மாதாந்திர ஊதியமாக ரூ5,000 அளிக்கப்படும்.
கிராமப்புறங்களில் தலைமை செயலகங்கள் உருவாக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்படும். ஊழலற்ற நிர்வாக அமைப்புக்காக இது செயல்படுத்தப்படும். இவ்வாறு ஜெகன் மோகன் அறிவித்தார்.
மதுவிலக்கு?
மேலும் தாம் முதல்வராகப் பதவியேற்றால் ஆந்திராவில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படும் என அறிவித்திருந்தார் ஜெகன். இந்த அறிவிப்பும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பயணம் ரத்து
இதனைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு தமது வீட்டில் மதிய விருந்து அளித்தார் ஜெகன். பின்னர் டெல்லியில் பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டிருந்தார். ஆனால் மாலை 4 மணி முதல் 7 மணி வரை டெல்லியில் விமானங்களை தரை இறக்க அனுமதி இல்லை என விமானக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவித்துவிட்டது.
இதனால் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி செல்லவில்லை. முதல்வர் பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி, தமது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பகவத் கீதை, குரான், பைபிள் என நினைத்து உறுதியாக நிறைவேற்றியே தீருவோம் எனவும் உறுதியளித்திருக்கிறார். ஜெகன் மோகனின் இந்த அறிவிப்புகள் ஆந்திராவில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.