மைனர் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற ஏமன் காரர் கைது
ஹைதராபாத்: மைனர் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற ஏமன் நாட்டைச் சேர்ந்தவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓமன் நாட்டிலுள்ள மஸ்கட்டில் இருந்து அல் பலுசி பாதர் யூசுப் சையத் என்பவர் கடந்த மாதம் 17ம் தேதி ஹைதராபாத் வந்துள்ளார். அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தங்கிய யூசுப், இடைத்தரகர் ஆயிஷா மூலம் தனக்கு மணமகள் தேடியுள்ளார்.
ஜூலை மாதம் 18ம் தேதி ஆயிஷா துணையுடன் ஆரப் கல்லி என்ற இடத்தில் 17 வயது சிறுமியைப் பெண் பார்க்கச் சென்றுள்ளார் யூசுப். அச்சிறுமியை அவருக்குப் பிடித்து விடவே, திருமணச் செலவுக்காக அவளது பெற்றோரிடம் ரூ. 30 ஆயிரம் பணம் அளித்துள்ளார்.
{ventuno}
பத்தாவது படிப்பை பாதியில் நிறுத்திய அச்சிறுமியின் தந்தை பள்ளிப் பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். அவரிடம் ஆயிஷா, ‘உங்கள் மகளுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய இருக்கிறது. எனவே, திருமணம் முடிந்ததும் ரூ. 20 ஆயிரம் தனக்கு கமிஷன் தந்து விட வேண்டும்' என ஆசை வார்த்தைகளைக் கூறி மூளைச் சலவை செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி ( நேற்று) திருமணத் தேதி முடிவு செய்யப் பட்டது. திருமணம் முடிந்ததும், அச்சிறுமிக்கு விசா கிடைக்கும் வரை இருவரும் தங்குவதற்கு நல்ல வீடு பார்க்கச் சொல்லி யூசுப், சிறுமியின் தந்தையிடம் மேலும் ரூ. 15 ஆயிரம் கொடுத்துள்ளார்.
திட்டமிட்டபடியே நேற்று இரவு திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது அந்த வழியே இரவு ரோந்துப் பணியில் சென்ற காவலர்கள் அச்சிறுமியின் வீட்டிற்கு அருகே கூட்டமாக இருப்பதைக் கண்டு விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியின் சம்மதமின்றி திருமணம் நடைபெற இருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுமியை மீட்ட போலீசார், யூசுப்பைக் கைது செய்தனர். இடைத்தரகரான ஆயிஷா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 வயது சிறுமியை கட்டாயக் கல்யாணம் செய்த அந்த ஏமன் நபருக்கு வயது 37 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.