8 மாத சிறைவாசம்... விடுதலை செய்யப்பட்டார் ஜம்மு காஷ்மீர் மாஜி முதல்வர் உமர் அப்துல்லா
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு. இதனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய பாஜக அரசு ரத்து செய்தது.
மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறாத வகையில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரும் அடங்குவர். ஜம்மு காஷ்மீரில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் அரசியல் கட்சியினர் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில் 3 முன்னாள் முதல்வர்கள் மீதும் அடுத்தடுத்து பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அண்மையில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்பு சட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் மெகபூபா முப்தி இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் மெகபூபா முப்தியும் விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது.
உமர் அப்துல்லா கருத்து
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் உமர் அப்துல்லா கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் மக்கள் எப்படி பல மாதங்களாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர் விவரமாக தெரிவிக்கிறேன். தற்போது கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க அரசுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதுதான் நமது முதன்மையான பணி. இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.
232 days after my detention today I finally left Hari Niwas. It’s a very different world today to the one that existed on 5th August 2019. pic.twitter.com/Y44MNwDlNz
— Omar Abdullah (@OmarAbdullah) March 24, 2020