அவங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு.. ஐபிஎல்லுக்கு சீன நிறுவனம் ஸ்பான்சர்.. ஒமர் அப்துல்லா கிண்டல்
ஸ்ரீநகர்:
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த மத்திய அரசும், பிசிசிஐயும் ஒப்புக்கொண்டுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த கிரிக்கெட் தொடர் நவம்பர் 10ம் தேதி வரை நடக்க உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு இடையே, கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த தொடர் நடக்க உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி செப்.19ல் தொடங்குகிறது.. நவ.10ல் இறுதி போட்டி.. மத்திய அரசு பச்சை கொடி
ஐபிஎல் தொடர்
சென்ற ஐபிஎல் தொடரின் மேஜர் ஸ்பான்சர் என்று பார்த்தால் அது சீனாவை சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் தான். இந்த நிலையில் சீனாவுடன் மோதல் நிலவும் நிலையில் இந்த வருடமும் விவோ செல்போன் நிறுவனம், ஐபிஎல் தொடரை வழங்க அனுமதிக்கப்படுமா, ஸ்பான்ஸர் செய்ய ஐபிஎல் நிர்வாகம் சீனாவின் நிறுவனத்தை அனுமதிக்குமா என்று கேள்வி எழுந்தது.
சீனா நிறுவனம்
இது தொடர்பாக இணையத்தில் நிறைய விவாதங்கள் நடந்தது. இந்த நிலையில் நேற்று ஐபிஎல் நிர்வாகம் இது தொடர்பாக முக்கிய முடிவை எடுத்தது. கடந்த ஐபிஎல் தொடருக்கு ஸ்பான்சர் செய்த அனைத்து நிறுவனங்களும் இந்த முறையும் ஸ்பான்சர் செய்யும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் இந்த முறையும் ஐபிஎல் தொடரை சீனாவின் விவோ நிறுவனம்தான் வழங்க உள்ளது.
விமர்சனம் வந்தது
ஐபிஎல் நிர்வாகத்தின் இந்த முடிவு சமூக வலைத்தளத்தில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. பலரும் ஐபிஎல் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து உள்ளனர். இந்த நிலையில் தேசிய கான்பிரன்ஸ் கட்சியை சேர்ந்த காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், பிசிசிஐ/ ஐபிஎல் நிர்வாகம் அனைத்து ஐபிஎல் ஸ்பான்சர்களையும் மீண்டும் அனுமதித்து உள்ளது.
விவோ நிறுவனம்
சீனாவை சேர்ந்த நிறுவனம் உட்பட அனைத்து நிறுவனங்களையும் ஐபிஎல் அனுமதித்து உள்ளது. சீனாவின் பொருட்களை புறக்கணிப்பதாக நினைத்து, அந்நாட்டு தொலைக்காட்சிகளை வீட்டின் பால்கனியில் இருந்து தூக்கி எறிந்தார்கள். அவர்களை எல்லாம் நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவர்கள் கடைசியில் இந்த செய்தியை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏன் அனுமதி
சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தற்போது சீனாவின் செல்போன் உற்பத்தி நிறுவனத்திற்கு ஐபிஎல் ஸ்பான்சர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பணத்தை, முதலீட்டை, தலையீட்டை எப்படி தடுக்க வேண்டும் என்று நாம் குழம்பும் போது இப்படி நடக்கிறது. இதனால் சீனா நம்முடைய நாட்டில் மூக்கை நுழைப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கவில்லை.
உறுதி அளிக்க முடியாது
இந்தியாவின் திடீர் மூவ், எதிர்பார்க்காத மூவ், கணிக்க முடியாத மூவ், சீனாவை தாக்க கூடிய மூவ் என்று சிலர் முன்பு கூறினார்கள் (சீன செயலிகள் தடை செய்யப்பட்ட போது). ஆனால் இப்போது நம்மால் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் இருக்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது, என்று ஒமர் அப்துல்லா குறிப்பிட்டு இருக்கிறார்.