மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.. நீண்ட போராட்டம் இனிதான் துவங்கும்.. உமர் அப்துல்லா கடும் எச்சரிக்கை
Recommended Video
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது, மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிவித்தார். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முதல் அம்மாநில முன்னாள் முதல்வர்கள், மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்துள்ள இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஜம்மு காஷ்மீர், மக்கள் இந்திய அரசு மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் மீதான ஒடுக்குமுறையாக இதை நான் பார்க்கிறேன். இந்த ஒரு மோசமான முடிவை அறிவிப்பதற்காகத்தான் காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து.. பாஜக கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவு
மத்திய அரசும் அதன் காஷ்மீர் பிரதிநிதியும் (ஆளுநர்) இதுபோன்ற ஒரு முடிவை எடுக்கப் போவதில்லை என்று எங்களிடம் கூறி வந்தது சுத்தப் பொய் என்பது இப்போது அம்பலமாகி விட்டது. எங்களைப் போன்றவர்கள், ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்கிறோம். ஆனால் எங்களையும் ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கிவைத்துவிட்டு, இதுபோன்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவு நீக்கப்படுவது சட்டவிரோதமானது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை தேசிய மாநாட்டு கட்சி உறுதியாக எதிர்க்கும். ஒரு நீண்ட மற்றும் கடினமான போராட்டம் இனிதான் துவங்கப்போகிறது. நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.