மோடியின் எளிமை நம்மிடம் இல்லை, அவரை விமர்சிக்கக் கூடாது... உமர் அப்துல்லா கண்டனம்
ஜம்மு காஷ்மீர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரதம வேட்பாளரான மோடி வெற்றி பெற மாட்டார். நாங்கள் வேண்டுமானால் டீக்கடை வைத்துத் தருகிறோம்' என்ற காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யரின் பேச்சுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.
இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட மணி சங்கர் அய்யர் மோடி குறித்துப் பேசுகையில், ‘நம் நாட்டிற்கு மோடியால் ஒருபோதும் பிரதமராக முடியாது. ஒருவேளை அவர் விரும்பினால் அவருக்கு நாங்கள் வேண்டுமானால் ஒரு டீக்கடை அமைத்து தருகிறோம். காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கட்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மணி சங்கர் அய்யரின் இத்தகைய கருத்துக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘மோடி குறித்து எதிர்மறையான கருத்து நிறைய உள்ளது மோடியிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால் அவரது அடிப்படை, அவர் வந்த விதம் மிக மிக சாதாரணமானவை, எளிமையானவை. நம்மிடம் நிச்சயம் அப்படிப்பட்ட அடிப்படை இல்லை. எனவே அவரை கேலி செய்து நமது பிரசாரத்தை பலமாக்க நாம் முயலவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.