முல்லைப் பெரியாறில் புதிய அணைக்கு அனுமதி தர வேண்டும்... மோடியிடம் உம்மன்சாண்டி மீண்டும் வலியுறுத்தல்
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.
இதனால் அணையின் சில மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. பின்னர் இது நிறுத்தப்பட்டது. தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மீண்டும் எந்த நேரத்திலும் நீர் திறக்கப்படலாம் என்பதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கேரளா வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை நேற்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முதல்வர் உம்மன்சாண்டி சந்தித்து பேசினார். அப்போது முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று உம்மன்சாண்டி வலியுறுத்தினார். அத்துடன் தமிழக முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
கடந்த வாரம் டெல்லி சென்ற உம்மன்சாண்டி, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இதே கோரிக்கையை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.