10 வருடத்தில் இல்லாத அளவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெரும் தண்ணீர் பஞ்சம்!
டெல்லி: உலக தண்ணீர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த கோடையில் பெரும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
'இந்தியா ஸ்பென்ட்' நடத்திய ஆய்வில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் இந்திய மாநில மக்களுக்கு நீர்பாசனம் மற்றும் குடிநீர் வழங்கிவரும் அணைக்கட்டுகளில் வெகுவாக நீர் குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
கிழக்கு இந்தியா மற்றும் மத்திய பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் ஓரளவுக்கு நீர் இருப்பு உள்ள போதிலும், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களிலுள்ள அணைக்கட்டுகளில் நீர் இருப்பு குறைந்துள்ளது.
தெற்கு தேய்கிறது
கிழக்கு இந்தியாவிலுள்ள அணைக்கட்டுகளில் அதன் கொள்ளளவில் 44 சதவீதம் அளவுக்கும், மத்திய மண்டலத்தில் உள்ள அணைகளில் 36 சதவீதமும், இருப்பு உள்ளன. ஆனால், தெற்கு இந்த விஷயத்தில் தேய்ந்துவிட்டது.
தெற்கே மோசம்
தென் மாநிலங்களிலுள்ள அணைக்கட்டுகளில் மொத்த கொள்ளளவில் வெறும் 20 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேற்கு மண்டலத்திலுள்ள மாநிலங்களில் 26 சதவீதத்திற்கும், வடக்கு மண்டலத்திலுள்ள நீர் தேக்கங்களில் 27 சதவீதம் அளவுக்கும் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
கோடை உச்சம்
கோடை காலம் இப்போதுதான் தொடங்கியுள்ள நிலையில், இனிமேல் நீரின் தேவை அதிகரிக்கும். 20 விழுக்காடு நீரை மட்டுமே வைத்து நீர் பாசனம், குடிநீர் தேவைகளை தென் மாநிலங்கள் எப்படி சமாளிக்கப்போகின்றன என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேள்வியாகும்.
10 வருட மோசம்
கடந்த 10 வருடங்களில் சராசரி நீர் இருப்பு 38.5% என்ற அளவில் இருந்த நிலையில், இவ்வாண்டு மிக மோசமான அளவுக்கு நீர் இருப்பு குறைந்து போயுள்ளது. இந்த தசாப்தத்தின் மிக மோசமான நிலை இது என்பது கவனிக்கத்தக்கது.
தென் மாநிலங்கள்
கிருஷ்ணா நதி தீரத்தில் கடும் பஞ்சம் நிலவுவதால், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் கடும் குடிநீர் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது.
மராட்டியம்
கடந்த நூற்றாண்டிலேயே மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டம், ஜெயக்வாடி பகுதி சந்திக்க உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. 6.8 பில்லியன் கியூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆந்திராவின் நாகார்ஜுன சாகர் அணை தற்போது காலியாகிவிட்டது.
காரணங்கள்
மக்கள் தொகை பெருக்கம், பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது போன்றவை குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம். தென் இந்தியாவில் மொத்தம் 31 பெரிய அணைக்கட்டுகள் உள்ளன. தமிழகத்திலுள்ள அணை நீர் இருப்பு 42 சதவீதமாக உள்ளது.