காங். தேசிய தலைவராக வேண்டியவர்.. ஒரே நாளில் எதிரியானார்.. யார் இந்த சிந்தியா? இதுதான் பின்னணி!
காங்கிரஸ் கட்சியின் மிக தீவிரமான உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்யா சிந்தியா அக்கட்சிக்கு எதிராகவே திரும்பி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போபால்: காங்கிரஸ் கட்சியின் மிக தீவிரமான உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்யா சிந்தியா அக்கட்சிக்கு எதிராகவே திரும்பி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலைக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள்.
மொத்தமாக 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அங்கு ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
இதை தடுக்கும் பொருட்டு மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.
அப்பாவின் பிறந்தநாள்.. மோடியுடன் மீட்டிங்.. பாஜகவில் இணைய திட்டமிடும் சிந்தியா.. என்ன நடக்கிறது?
யார் இவர்
காங்கிரஸ் ஆட்சியை அங்கு ஆட்டம் காண வைத்துள்ள சிந்தியா பெரிய அரசியல் வரலாறு கொண்டவர். ஜோதிராதித்யா சிந்தியாவின் குடும்பமே ராஜ குடும்பம் ஆகும். இவரின் தாத்தாக்கள் குவாலியர் பகுதியை ஆண்டு வந்த ராஜவம்சத்தை சேர்ந்தவர்கள். இந்திய குடியரசு ஆன பின் சிந்தியாவின் அப்பா மாதவ்ராவ் சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர்கள் குடும்பத்தின் புகழை அப்போது காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொண்டது. மாதவ்ராவ் காங்கிரஸ் கட்சியின் தொடக்க கால தலைவர்களுக்கு மிகவும் நெருக்கம்.
என்ன முக்கியம்
முக்கியமாக இவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 1971ல் இருந்து 9 முறை இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார். ஒருமுறை கூட இவர் அதில் தோல்வி அடைந்தது இல்லை. காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பல்வேறு மத்திய அமைச்சர் பதவியை வகித்து இருக்கிறார். முதல் தேர்தலை ஜன சங்க கட்சியில் இருந்து போட்டியிட்டு வென்றார், அதன்பின் சுயேட்சையாக வென்றார், அதன்பின் 1980களில் காங்கிரசில் இணைந்தார்.
காங்கிரஸ்
1984 லோக்சபா தேர்தலில் குவாலியர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு, இவர் பாஜகவின் வாஜ்பாயை தோல்வி அடைய செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜிவ் காந்தி அமைச்சரவையில் இவர் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தாலும் அவ்வப்போது ஆட்சிக்கு எதிராக புது கூட்டணிகளை உருவாக்கியவர். பின் மீண்டும் மனசு மாறி காங்கிரசில் இணைந்தும் இருக்கிறார்.
வரலாறு
அதே வழியில் வந்தவர்தான் ஜோதிராதித்யா சிந்தியா. காங்கிரஸ் எம்பியாக இருந்த இவர் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின் கீழ் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்து இருக்கிறார். மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியில் மிக தீவிரமாக உறுப்பினராக இவர் இருந்துள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஜோதிராதித்யா சிந்தியாதான் காரணம்.
மக்கள் போராட்டம்
மாரத்தா மக்களின் போராட்டமும், மாரத்தா மன்னர் குடும்பமான ஜோதிராதித்யா சிந்தியாவின் பிரச்சாரமும்தான் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க மிக முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு முதல்வர் பதவி அளிக்கப்படவில்லை. கமல்நாத்திற்கு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. அதன்பின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகவே சோனியா காந்தி இடைக்கால தலைவர் ஆனார்.
சோனியா யார்?
சோனியா வந்த பின் ஜோதிராதித்யா சிந்தியா கட்சியில் மேலும் ஒதுக்கப்பட்டார். கமல் நாத் ஆதரவாளர்களுக்கு கட்சியில் அதிக அளவில் ஆதரவு வழங்கப்பட்டது. இளைய தலைவர்கள் எல்லோரும் ஓரம்கட்டப்பட்டார்கள். சோனியாவிற்கு நெருக்கம் ஆனவர்களின் கை ஓங்கியது. இதனால்தான் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பினார்.
டிவிட்டர்
கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே ஜோதிராதித்யா சிந்தியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் என்ற பயோவை நீக்கினார். காங்கிரஸ் உறுப்பினர், எம்பி என்பதை நீக்கிவிட்டு மக்கள் பணியாளர், கிரிக்கெட் ஆர்வலர் என்று மாற்றினார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா. கட்சியில் இருந்து மொத்தமாக வெளியேற திட்டமிடுகிறாரா என்று கேள்விகள் எழுந்தது.
தீ போல பரவியது
இது பெரிய தீயாக பரவியது. ஆனால் அப்போது சிந்தியா, நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன். என் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். என்னுடைய ரத்தம் எது என்று தெரியாமல் எல்லோரும் வதந்தி பரப்புகிறார்கள். இதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. என்னுடைய அப்பா மாதவ்ராவ் சிந்தியாவின் வரலாறு அவர்களுக்கு தெரியவில்லை என்று கூறினார். ஆனால் இப்போது உண்மையில் இவர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பி உள்ளார்.
யாருடைய ரத்தம்
காங்கிரஸ் ரத்தம் என்று கூறியவர், காங்கிரஸ் தேசிய தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர், தற்போது காங்கிரஸ் கட்சியை கதிகலங்க வைத்துள்ளார். கமல்நாத் உடன் ஏற்பட்ட மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் நிலைக்கு சென்றுள்ளது. இவர் அப்பா மாதவராவை போல ஆட்சிக்கு எதிராக புதிய கூட்டணி உருவாக்குவாரா அல்லது மொத்தமாக பாஜகவில் இணைவாரா என்று விரைவில் தெரிந்துவிடும்.