பில்லியனாராக வலம் வந்த சத்யம் ராஜூவின் ஒருநாள் சம்பளம் ரூ. 50!
ஹைதராபாத்: பில்லியனராக வலம் வந்து, வரவு செலவு கணக்கில் மோசடி செய்ததற்காக தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் சத்யம் ராஜூவின் ஒரு நாள் சம்பளம் தற்போது ரூ. 50 ஆகும்.
கடந்த 2009ம் ஆண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம், அதன் வரவு செலவு கணக்கில் பல ஆண்டுகளாக மோசடி செய்து, லாபத்தை அதிகமாக காட்டி ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான அந்நிறுவனத்தின் தலைவர் பி.ராமலிங்க ராஜூ மீது புகார் அளிக்கப் பட்டது.
இது நாட்டின் மிகப்பெரிய கணக்கு மோசடி எனக் கூறப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சத்யம் கப்யூட்டர்ஸ், தனது பங்குதாரர்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ கூறியது.
இது தொடர்பாக ராமலிங்க ராஜூ, அவரது சகோதரர்கள் ராம ராஜூ, சூரிய நாராயண ராஜூ, சத்யம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி வண்ட்லமணி சீனிவாஸ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஹைதராபாத் சிபிஐ தனிக்கோர்ட், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதோடு, ராமலிங்க ராஜூவுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப் பட்ட ராமலிங்க ராஜூவுக்கு கைதி எண் 4148 வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவர் செய்து வரும் வேலைக்கு நாளொன்றுக்கு ரூ. 50 ஊதியமாக வழங்கப் படுகிறதாம்.
அந்தப் பணத்தில் ரூ. 25 ஐ மட்டுமே அவர் பயன் படுத்திக் கொள்ள முடியும். மீதிப்பணம் அவரது வங்கிக் கணக்கில் சேமிக்கப் படும்.
எனவே, அவர் தனது ஊதியத்தில் கிடைக்கும் பணத்தில் தனக்குத் தேவையான டூத் பேஸ்ட் , பிஸ்கட், பிரட் மற்றும் தண்ணீர் பாட்டில் போன்றவைகளை சிறை கேண்டின் மூலம் பெற்றுக் கொள்வதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.