நைஜீரியர் கொலையில் கோவா இளைஞர் கைது! வீடு கொடுக்க மக்கள் எதிர்ப்பு!
பனாஜி: நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கோவா இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டார்.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒபாடோ உலமோ சிமியோன் என்பவர் கடந்த வாரம் பாரா கிராமத்தில் படுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட் நைஜீரியர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவா போலீசார் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு சென்ற நைஜீரிய தூதரக அதிகாரி, எங்கள் நாட்டவரை தாக்கினால் நைஜீரியாவில் வசிக்கும் 10 லட்சம் இந்தியர்களை விரட்டியடிப்போம் என்று எச்சரித்தார்.
இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில் சிமியோனை சிலருடன் சேர்ந்து கொலை செய்ததாக வடக்கு கோவாவிற்குள்பட்ட சப்போரா கடற்கரைப் பகுதியில் சுரேந்திரபால் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நைஜீரியர்களை கோவாவைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் நைஜீரிய நாட்டவருக்கு தங்கும் இடத்தை எவருமே தரக்கூடாது என்றும் அம்மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.