அடடா நீ இங்கியா இருக்கே.. ஒத்த மாட்டுக்கு 5 பேர் உரிமை கொண்டாடியதால் களேபரம்!
ஒரு மாட்டுக்கு 5 பேர் சண்டை போட்டுக் கொண்டனர்.
எர்ணாகுளம்: எவ்வளவுதான் இயற்கை நமக்கு பாடத்தை கற்று கொடுத்தாலும் சிலருக்கு அவர்களது புத்தி போகவே போகாது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட பசுவுக்கு 5 பேர் உரிமை கொண்டாடும் கதைதான் இது.
எர்ணாகுளம் அருகே மேக்கடம்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு பசுமாடு சுற்றி கொண்டிருந்தது. இது வெள்ளத்தில் இருந்து தப்பி வந்தது போலும். இதனை ஒருவர் பார்த்துவிட்டு தன் வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றார். அதனை பார்த்த மற்றொருவர், இது என் மாடு? நீ எப்படி கொண்டு போவாய்? என சண்டைக்கு வந்தார்.
எங்கெல்லாம் தேடுறது
இருவரின் சண்டையை பார்த்த இன்னொருவர் வந்து, உன்ன எங்கெல்லாம் தேடுறது, வா வீட்டுக்கு என்று அழைத்து செல்ல முயன்றார். 3 பேரும் சண்டை போட்டு கொண்டிருக்க சாலையில் சென்ற மற்றொருவர் குறுக்கே புகுந்து, இது என் மாடு ஆச்சே என்றார். இது போதாதென்று 5-வதாக ஒருவர் வந்து, அங்கு நடப்பது எதுவுமே தெரியாத மாதிரி, ஒருவழியா என்னை தேடி வந்துட்டியா?, வா போலாம் என்று மாட்டை அழைத்து செல்ல முயன்றார்.
ஒரு மாட்டுக்கு 5 பேர்
இப்படியே 5 பேரும் அந்த மாட்டுக்காக சண்டை போட்டுக் கொண்டனர். இந்த மாடு என்னுடையதுதான் என்று, ஒருவர் கத்தி பேசுகிறார், மற்றொருவர் கெஞ்சி கேட்கிறார், இன்னொருவர் கண்ணீர் ததும்ப சொல்கிறார்... இப்படியே பஞ்சாயத்து போனது. இந்த வீரம் கொப்பளிக்கும், உரிமை போராட்ட சண்டை காட்சியினை அந்த மாடு கண்டுக்க கூட இல்லை. அது தன் இஷ்டத்துக்கு அங்கிருந்த புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.
ஓனர் தெரிஞ்சிடுச்சிப்பா..
பிறகு கடைசியாக ஒரு ஹோமியோபதி டாக்டர் அங்கு வந்தார். நடந்த பஞ்சாயத்தை கேட்டார். பிறகு மாட்டின் காதில் இன்சூரன்ஸ் முத்திரை குத்தப்பட்டிருக்கிறதா என பார்த்தார். அதிர்ஷ்டவசமாக.... இன்சூரன்ஸ் முத்திரை மாட்டின் காதில் இருந்தது. உடனே டாக்டர், "அப்பாடா.. நம்பர் இருக்குப்பா.. மாட்டுக்கு ஓனர் யார்னு இப்போ தெரிஞ்சிடும்" என்றார்.
ஹீரோக்கள் எஸ்கேப்
பிறகு அந்த எண்ணை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொடுத்து விசாரித்தார். ஓனர் யார் என்று இன்சூரன்ஸ் ஆபீசில் இருந்து தகவல் தெரிவதற்குள் 5 "ஹீரோக்களும்" அங்கிருந்து எஸ்கேப். யார் எந்த பக்கம் ஓடினார்களோ தெரியாது. கடைசியில் அந்த மாநாடு பேபி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. அவரது வீடே வெள்ளத்தில் மூழ்கிப் போய் விட்டதால் அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். மாட்டை என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே போக விட்டு விட்டாராம் பேபி.
கேரளா முழுவதுமே தண்ணீராக கிடக்கும்போது, இப்படி 5 பேரும் நடித்து தள்ளி கண்ணீரை கசக்கி பிழிந்தால் நாடு தாங்குமா?