தெலுங்கானா அரசியலில் களமிறங்கும் ஜெகன்மோகன் சகோதரி... முதல்வராவேன் என நம்பிக்கை
ஐதராபாத் : தெலுங்கானாவில் வேலையில்லாத 1.91 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் என வலியுறுத்தி, ஐதராபாத்தில் உள்ள இந்திரா பார்க்கில் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஓய்.எஸ்.ஷர்மிளா போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத் பார்க்கில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக தெலுங்கானா போலீசார் நேற்று மாலை வெளியேற்றினர். ஆனால் தெலுங்கானா அரசியலில் புதிதாக அடியெடுத்து வைத்துள்ள ஷர்மிளா, ஐதராபாத்தின் மற்றொரு பகுதியில் உள்ள லோட்டஸ் பார்க்கில் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
தனது தாயாருடன் ஷர்மிளா நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு தெலுங்கானா முழுவதிலும் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. ஷர்மிளாவின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டதால் இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் முக்கிய பிரச்சினையாக மாறி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'சின்னக் கலைவாணர்' விரைவில் குணமடைந்து.. கலைச்சேவையை தொடர வேண்டும்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்!
அரசியல் கட்சி துவங்கும் ஷர்மிளா
போராட்டத்துடன் நிற்காமல், தனது தந்தையின் பிறந்தநாளான ஜுலை 8 ம் தேதி, பேரணி ஒன்றை நடத்த போவதாகவும் ஷர்மிளா அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அன்றைய தினமே தனது புதிய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா முதல்வராவேன்
இது பற்றி ஷர்மிளா பேசுகையில், எனது ஆதரவாளர்கள் விடுவிக்கப்படும் வரை எனது உண்ணாவிரதம் தொடரும். ஒருநாள் நான் நிச்சயம் தெலுங்கானா முதல்வர் ஆவேன் என தெரிவித்துள்ளார். மேலும் ஜுலை 8 ம் தேதி தனது கட்சியின் சின்னம், பெயர், கொடி, கொள்கை ஆகியவற்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெகன் துவக்கி வைத்த ஃபார்முலா
ஆனால் தெலுங்கானாவில் தனது சகோதரியின் அரசியல் திட்டத்தை பற்றி எதுவும் பேசாமல் ஒதுங்கி இருந்து வருகிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஜெகன் மோகன் ரெட்டியும் ஆந்திர அரசியலில் நுழைந்த போது, அரசுக்கு எதிரான போராட்டத்தை துவக்கியே மிகப் பெரிய தலைவராக வளர்ந்தார். அவர் நடத்திய மாநிலம் முழுவதிலுமான நடைபயணம், சாமாணிய மக்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சட்டசபை தேர்தலை குறிவைக்கும் ரெட்டிகள்
தெலுங்கானா மாநிலத்தில் 2023 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ரெட்டி சமூகத்தினரில் ஆதரவு மற்றும் உதவியாலேயே ஷர்மிளா, அம்மாநில அரசியலில் நுழைகிறார் என கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே அரசியலில் செல்வாக்கானவர்களாக ரெட்டி சமூகத்தினர் இருந்தனர்.
ஷர்மிளாவிற்கு ஆதகரிக்கும் ஆதரவு
ஷர்மிளாவின் தந்தையும், பிரிக்கப்படுவதற்கு முந்தைய ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மீதான மதிப்பு காரணமாக எஸ்சி, எஸ்டி ஓட்டுக்கள் ஷர்மிளாவிற்கு விழும் என கூறப்படுகிறது. இதனால் தற்போது அவர் கட்சி ஆரம்பித்தால், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை கைப்பற்றவும் வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.