எபோலா காய்ச்சலுக்கு முதல் இந்தியர் பலி: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: எபோலா வைரஸ் தாக்கி இதுவரை ஒரேயொரு இந்தியர் பலியாகியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக் கணக்கானோர் வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் எபோலா தாக்கி இந்தியர் யாராவது பலியாகியுள்ளார்களா என்ற கேள்வி லோக்சபாவில் எழுந்தது. அதற்கு மத்திய வெளியுவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,
அரசிடம் உள்ள ஆவணங்களின்படி இதுவரை ஒரேயொரு இந்தியர் மட்டும் எபோலா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார். லைபீரியாவில் உள்ள மருந்தகத்தில் பணியாற்றி வந்த முகமது மிர் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி பலியானார். அவரது மரணம் குறித்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி அவரது உடல் லைபீரியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
எபோலா தாக்கியுள்ள நாடுகளில் வாழும் இந்திய மக்கள், அந்நாட்டு அரசு மற்றும் ஐ.நா. ஏஜென்சீக்களுடன் தொடர்பில் இருக்குமாறு இந்திய தூதரக குழுக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தியா வர விரும்பும் நம் நாட்டு குடிமக்களுக்கு அவர்களின் விருப்பப்படி உதவி செய்யப்படுகிறது. மேலும் எபோலா தாக்கிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.