கொல்லம் கோர்ட் அருகே ஜீப்பில் குண்டு வெடிப்பு.. ஒருவர் காயம்! போலீஸ் குவிப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் நகர கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் நலத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் சக்தி குறைந்த குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லத்தில் கலெக்டர் அலுவலகத்தை ஒட்டியே மாவட்ட நீதிமன்றமும் அமைந்துள்ளது. இதனால் இந்த தாக்குதல் எந்த இலக்கை குறி வைத்து நடத்தப்பட்டது என்பதில் சந்தேகம் உள்ளது.
தகவல் அறிந்ததும் போலீசாரும், வெடிகுண்டு ஆய்வு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 7 பேட்டரிகளும், 13 பியூஸ் வயர்களும் சம்பவ இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே இது டைம் பாம் வகை வெடிகுண்டு என்று தெரியவந்துள்ளது.
மோப்ப நாய்களும் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சக்தி குறைந்த குண்டு என்பதால் அதிருஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சி வந்த பிறகு நடைபெற்ற பெரிய அளவிலான தாக்குதல் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.