பெங்களூருவில் தமிழக மாணவரைத் தாக்கிய நபர் கைது- கர்நாடகா அமைச்சர் பரமேஸ்வர்
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டதற்காக தமிழக மாணவரைத் தாக்கியவர்களில் வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இதற்கு எதிராக கடந்த 9-ந் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் கன்னட திரை உலகத்தினரும் பங்கேற்றனர். இதை விமர்சித்து தமிழக இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
கொந்தளிப்பு
அவரை தேடிக் கண்டுபிடித்த கன்னட அமைப்பினர் கொடூரமாக தாக்கி அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் எதிரொலி
தமிழகத்திலும் கர்நாடகா நிறுவனங்கள், வங்கிகள் தாக்கப்பட்டன. சென்னை, ராமேஸ்வரம், சீர்காழி, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன்னட நிறுவனங்கள் முற்றுகையிடப்பட்டன.
தமிழக இளைஞர் மீது வழக்கு
இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர், பெங்களூருவில் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் உள்பட அவருடைய குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லை.
ஒருவர் கைது
அவரை தேடும் பணி தொடங்கியுள்ளது. அவரை தாக்கிய வழக்கில் வெங்கடேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய போலீஸ் படையில் இருந்து ஏற்கனவே 10 கம்பெனி போலீஸ் படை கர்நாடகத்துக்கு வந்துள்ளது. மேலும் 10 மத்திய போலீஸ் படை வரவழைக்கப்படுகிறது.
கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றார்.