காஷ்மீரில் முழு அடைப்பு: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி- யாசின் மாலிக் கைது!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போலி என்கவுண்ட்டரில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இன்றைய போராட்டத்தின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு இளைஞர் பலியானதால் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலத்தில் திரால் என்ற இடத்தில் கடந்த 13-ந் தேதி பாதுகாப்பு படையினரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன.
இந்தப் போராட்டங்களைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய ஹூரியத் தலைவர் கிலானிக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு பேரணியில் பாகிஸ்தான் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
இதனை நியாயப்படுத்தி பேட்டியளித்த பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டார். என்கவுண்ட்டர் மற்றும் ஆலம் கைதைக் கண்டித்து முழு அடைப்புக்கு ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர் கிலானி இன்று அழைப்பு விடுத்து இருந்தார். இதனிடையே கிலானியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த முழு அடைப்பின் போது பட்காம் மாவட்டம் நர்பல் பகுதியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதலின்போது இளைஞர் ஒருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு செல்ல ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக் மற்றும் சமூக ஆர்வலர் ஸ்வாமி அக்னிவேஷ் ஆகியோர் முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு, உயிர் பலிகள், கைது நடவடிக்கைகளால் ஜம்மு காஷ்மீரில் கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது.