ரயில்வே பாதுகாப்புக்காக 5 ஆண்டுகளுக்கு 1 லட்சம் கோடி.. ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு
ரயில்வே பாதுகாப்பிற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: 2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரயில்வே பாதுகாப்பிற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்த ஒருங்கிணைந்த மத்திய பட்ஜெட்டில் ரயில்வே பாதுகாப்பிற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் பாதுகாப்பு, வளர்ச்சி, தூய்மை மற்றும் சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அருண் ஜேட்லி கூறினார்.
ரயில்வேயின் பாதுகாப்பை பலப்படுத்தும் அதே வேளையில், நடப்பு நிதியாண்டில் 3500 கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் 500 ரயில் நிலையங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றும், 7000 ரயில் நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019ம் ஆண்டிற்குள் அனைத்து ரயில்கள் கழிவறைகளும் பயோ டாய்லெட்டாக மாற்றப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.