கெளரி லங்கேஷ் கொலை வழக்கு.. முக்கிய குற்றவாளி கைது
இடதுசாரி சிந்தனையாளர் கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
பெங்களூரு : இடதுசாரி சிந்தனையாளர் கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மூத்த பெண் பத்திரிகையாளரும், தீவிர இடதுசாரி சிந்தனையாளருமான கெளரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
வலதுசாரி இயக்கங்களுக்கு எதிராக அவர் தொடர்ந்து எழுதி வந்ததே கொலைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஹிந்துத்வா செயற்பாட்டாளரும், சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டு இருந்த நவீன் குமார் என்கிற நபர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொலையில் முக்கியக் குற்றவாளியான பரசுராம் வாக்மோர் நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் இது 6வது கைது.
கொலை நடந்து 9 மாதங்களாக தலைமறைவாக இருந்த பரசுராமை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், தனி இடத்தில் வைத்து விசாரணை நடந்துவருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.