ஒரே தேசம் ஒரே தேர்தல்- இந்திய கூட்டாட்சி கட்டமைப்பை அழித்துவிடும்- ஸ்டாலின்
ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் ஒரே நேரத்தில் வைத்தால் இந்திய கூட்டாட்சி கட்டமைப்பை அழித்துவிடும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஒரே நேரத்தில் லோக்சபைக்கும் சட்டசபைக்கு தேர்தல் நடத்தினால் இந்திய கூட்டாட்சி கட்டமைப்பை அழித்துவிடும் என்று சட்ட ஆணையத்துக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை தனித்தனியாக நடத்தினால் பல கோடி பணம் விரயம் ஆவதால் இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது என்று சட்டத் துறை ஆணையம் பரிந்துரைத்தது.
இந்த திட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை தவறான பரிந்துரை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுகுறித்து சட்ட ஆணையத்துக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் இரு தேர்தல்களும் நடத்தப்படுவது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விதிகளுக்கு மாறானது.
2014-இல் பொது தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு 3870 கோடி செலவு செய்தது. அதாவது ஒரு வாக்காளருக்கு செய்த செலவு ரூ.45 ஆகும். அவ்வாறிருக்கையில் இது எப்படி பெரிய தொகை செலவிட்டது போன்றதாகும் என்பது புரியவில்லை.
இந்திய சட்ட ஆணையத்தின் தற்போதைய பரிந்துரையால் இந்திய கூட்டாட்சி உள்கட்டடமைப்பு சேதப்படுத்தப்படும். எனவே ஒரே தேர்தல் ஒரே தேசம் நடைமுறைக்கு திமுக சார்பில் எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.