நாகலாந்தில் வாக்குப்பதிவு தீவிரம்... வாக்குச்சாவடியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு!
வாக்குப்பதிவு நடக்கும் நாகலாந்து மாநிலத்தில் வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததால் பரபரப்பு நிலவுகிறது.
கோஹிமா : நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் டிசிட் வாக்குச்சாவடியில் குண்டுவெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாகலாந்து மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 13-வது சட்டசபையை அமைக்க நாகலாந்து மக்கள் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தீவிரமாக களமிறங்கி உள்ளன.
இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மோன் மாவட்டம் டிசிட் வாக்குச்சாவடியில் திடீரென குண்டுவெடிப்பு நடந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.