ஒரு மகன் விபத்தில் பலியானான், மற்றொருவனை புலி கொன்றுவிட்டதே: தாய் கண்ணீர்
டெல்லி: எனது ஒரு மகன் விபத்தில் பலியானான், மற்றொருவனை வெள்ளை புலி கொன்றுவிட்டது என்று டெல்லி விலங்கியல் பூங்காவில் பலியான வாலிபர் மக்சூதின் தாய் இஸ்ரத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மெஹ்பூஸ். அவரது மனைவி இஸ்ரத். அவர்களுக்கு மஹ்மூத், மக்சூத் உள்பட 3 மகன்கள். அதில் மூன்றாவது மகன் இரண்டு வயது இருக்கையில் சாலை விபத்தில் பலியானார். இதையடுத்து கணவரை பிரிந்த இஸ்ரத் மகன்களுடன் டெல்லிக்கு வந்தார். டெல்லிக்கு வந்த இடத்தில் அவருக்கும் பர்தேசி என்பவருக்கும் இடையே உறவு ஏற்பட்டது.
தற்போது பர்தேசியுடன் வாழும் இஸ்ரத்தின் மூத்த மகன் மஹ்மூத் ஜெய்பூரில் வேலை பார்க்கிறார். 2வது மகன் மக்சூத் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்தார். அவர் வேலை பார்த்த பணம் ரூ.1,000 ரொக்கத்தை இஸ்ரத் மக்சூதிடம் அளிக்க அவர் டெல்லி விலங்கியல் பூங்காவுக்கு சென்றார். அங்கு அவரை வெள்ளை புலி விஜய் கொன்றது.
இந்த தகவல் அறிந்த மஹ்மூத் டெல்லி விரைந்தார். கொல்கத்தாவில் இருக்கும் மக்சூதின் மனைவி பாத்திமா 7 மாத கர்ப்பிணி ஆவார். தனது கணவர் கொல்லப்பட்ட உடன் அவர் டெல்லிக்கு விரைந்து வந்தார். மக்சூதுக்கு இந்தியா கேட், ஜும்மா மஸ்ஜித் மற்றும் விலங்கியல் பூங்காவுக்கு செல்வது என்றால் பிடிக்கும் என இஸ்ரத் தெரிவித்தார்.
மக்சூதின் மனைவி பாத்திமா கூறுகையில்,
மக்சூதின் தாய் கொல்கத்தாவில் வசிக்கையில் அவரும், என் தாயும் தோழிகள். கடந்த 2012ம் ஆண்டு மக்சூதுக்கு என்னை பெண் கேட்டார் இஸ்ரத். எங்கள் குடும்பத்தார் 2012ம் ஆண்டு மே மாதம் அஜ்மீர் தர்காவுக்கு சென்ற பிறகு எங்களுக்கு டெல்லியில் திருமணம் ஆனது என்றார்.
ஒரு மகன் விபத்தில் பலியானான், மற்றொரு மகன் புலியால் கொல்லப்பட்டான் என்று கூறி அழுதார் இஸ்ரத்.