மேற்கு வங்கம்.. 24 எம்எல்ஏக்கள் "மிஸ்சிங்.." ஆடிப்போன பாஜக.. உள்ளுக்குள் சிரிக்கும் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜிக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று பாஜக திட்டம் போட்டால் இப்போது அவர்கள் கட்சியின் எம்எல்ஏக்களே, அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்தி, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாஜக பெரும் முயற்சி எடுத்தது.
ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 74 தொகுதிகளில் மட்டும்தான் பாஜக வெல்ல முடிந்தது.
முகுல் ராய் வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்ஸரே இனிதான்.. பாஜக மொத்தமா சரிய போகுது.. மம்தா அதிரடி
மத்திய அமைச்சரவை
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் மேற்கு வங்க மாநிலத்தில் களம் இறக்கப்பட்டது. மமதா பானர்ஜி தனியாளாக இவற்றை சமாளித்தார். அதிலும் குறிப்பாக, மமதா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்த சுவேந்து அதிகாரி என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளியை தங்கள் பக்கம் இழுத்தது பாஜக.
எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி
நந்திகிராம் சட்டசபைத் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக சார்பில் களம் கண்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலமாக மேற்கு வங்க சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு வந்துள்ளார் சுவேந்து அதிகாரி.
திரும்ப வரும் தலைவர்கள்
இவரைப் போல மேலும் பல திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய புள்ளிகள் தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் தாவி இருந்தனர். அவர்கள் இனிமேல் அடுத்த ஐந்து வருடங்கள் மமதா பானர்ஜி ஆட்சிதான் என்பது உறுதியாகி விட்டதாலும், அபார எண்ணிக்கையில் அவர் வெற்றி பெற்றுள்ளதன்மூலம் மக்கள் ஆதரவு அவருக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டதாலும், இப்போது மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரிட்டர்ன் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகளை தடுக்க பாஜக மேலிடம் ஏதேதோ பிரயத்தனங்கள் செய்கிறது. ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை.
முகுல் ராய் ரிட்டர்ன்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்ற முதல் முக்கிய தலைவர் என்றால் அது முகுல் ராய். பாஜக தேசியத் துணைத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த வாரம் தனது மகன் சுப்பிரங்குசுடன் இணைந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிவிட்டார். இதேபோல ராஜீப் பானர்ஜி, திபேந்து பிஸ்வாஸ் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் சந்திப்பில் 24 பாஜக எம்எல்ஏக்கள் மிஸ்சிங்
தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதாகவும், முதல்வர் அதை தடுக்கவில்லை என்றும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதே தொனியில் மேற்குவங்க மாநில ஆளுநரும் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். விரும்பத்தகாத சம்பவங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெறுவதாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்த நிலையில், மேற்கு வங்க அரசுக்கு எதிராக புகார் அளிக்க சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் குழு நேற்று ஆளுநரை சந்தித்து. ஆனால் பாஜகவை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சித் தலைவருடன் ஆளுநரை சந்திப்பதற்கு செல்லவில்லை. இது பாஜக மேலிடத்தை தூக்கிவாரிப்போட்டது.
மூன்றில் ஒரு பங்கு
மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி ஆவர்த்தனம் செய்தால் எந்த கட்சிதான் அதிர்ச்சி அடையாது. மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி அளிக்கலாம் என்று நினைத்த பாஜக தலைமைக்கு இப்போது அவர்கள் கட்சி எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர்.
பாஜகவுக்கு அதிர்ச்சி
ஆளுநர் மாளிகை செல்லாத எம்எல்ஏக்கள் பலரும் முகுல்ராய்க்கு நெருக்கமானவர்கள். இதுதான் பாஜகவில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது அவர்கள் மறுபடி தினமும் காங்கிரசுக்கு திரும்பி விடுவார்களோ என்ற அச்சம் பாஜக தலைவர்கள் மத்தியில் இருக்கிறது. அப்படி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திருப்பினால் சட்டசபையில் பாஜக பலம் மளமளவென குறைந்து விடும்.