அழ வைக்கும் வெங்காயம்- சில்லறை விலையைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. சில்லறை விலையும் அதிகரித்திருப்பதால் பீதி அடைந்துள்ள மத்திய அரசு, வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபகாலமாக வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்களில் தண்ணீர் வரும் அளவுக்கு அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது மத்திய அரசுக்கும் கலக்கத்தைக் கொடுத்துள்ளது.
மொத்த விற்பனையில் குறைந்த விலைக்கு விற்கப்படும் வெங்காயம், சில்லறை விற்பனையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வெங்காயப் பதுக்கலைத் தடுக்க உத்தரவு
இதனால் செயற்கையான விலையேற்றத்தை உருவாக்கும் விதமாக வெங்காயத்தை யார் பதுக்கினாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
6223 பேர் கைது
இதன்படி இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 35 ஆயிரம் முறை வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது அதிரடி சோதனை நடத்தப்பட்டதில், பதுக்கலில் ஈடுபட்ட 6,223 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மத்திய அரசு சொல்வது என்ன?
இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சக செயலாளர் கேசவ் தேசிராஜூ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
இடைவெளி...
வெங்காய விற்பனையில் மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அதே நேரம் வெங்காயத்தின் கையிருப்பும் அதிக அளவில் இருக்கிறது. வினியோகமும் சீராக உள்ளது.
சில்லறை விற்பனை...
அப்படி இருக்கும்போது ஏன் இந்த இடைவெளி வருகிறது என்பது தெரியவில்லை. இதை வைத்து பார்க்கும்போது, சில்லறையாக விற்பனை செய்வதில்தான் பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கடும் நடவடிக்கை...
எனவே வெங்காயத்தின் சில்லறை விலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்ளப்படும்.
அனுமதி...
வெங்காய பதுக்கலை தடுப்பதற்கு உதவியாக வெங்காய விற்பனையாளர்களது இருப்பை கட்டுப்படுத்துவற்கான அனுமதியை அளிக்கும்படி சத்தீஷ்கார், மேற்குவங்காளம், டெல்லி ஆகிய மாநிலங்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. விரைவில் இதற்கு அனுமதி அளிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.