பவானியை மனித வெடிகுண்டாக நினைத்து காப்பாற்ற முன்வராத மக்கள்!
பெங்களூரு: பெங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது படுகாயமடைந்து கீழே விழுந்த பவானியை, மனித வெடிகுண்டு என்று கருதிய அக்கம் பக்கத்தினர் அவருக்கு அருகில் செல்ல தயங்கி நின்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அவரது உறவினரான கார்த்திக் விளக்கிய பிறகுதான் அவரைக் காப்பாற்றும் முயற்சிகள் நடந்துள்ளது. இந்தத் தாமதம், ஆம்புலன்ஸில் கூட்டிச் செல்லாமல் ஆட்டோவில் கூட்டிச் சென்றது, இதன் காரணமாக அதிக அளவில் ரத்தம் வெளியேறியது ஆகிய காரணங்களால்தான் பவானி உயிரிழந்துள்ளார் என்று கருதப்படுகிறது.
விடுமுறையைக் கொண்டாட தனது பிள்ளைகளுடன், பெங்களூரு சென்றிருந்தபோது சர்ச் சாலையில் நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி பவானி உயிரிழந்தார். குண்டுவெடிப்பில் சிக்கி அவர் படுகாயமடைந்து கீழே விழுந்துள்ளார். அவரது மைத்துனர் மகன் கார்த்திக்கும் இதில் காயமடைந்தார்.
கீழே விழுந்த பவானியின் தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அவர் கீழே விழுந்த சமயத்தில் அந்த, இடத்தில் பலர் இருந்துள்ளனர். ஆனால் குண்டுவெடித்ததும், அதில் பவானி அதிக அளவிலான காயத்தை அடைந்ததையும் பார்த்த அவர்கள் அவர் மனித வெடிகுண்டாக இருக்கலாமோ என்று சந்தேகம் அடைந்து அருகில் வராமல் இருந்துள்ளனர்.
இதனால் ரத்தம் கொட்டிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார் பவானி. இந்த நிலையில்தான் முதுகில் காயமடைந்த நிலையில் கிடந்த கார்த்திக் சுதாரித்து விழுந்து கிடப்பது தனது சித்தி என்று கூறி விளக்கிய பிறகே அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் நரசிம்மா விரைந்து வந்து தனது ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார்.
ஆனால் அதற்குள் அதிக அளவிலான ரத்தத்தை இழந்து விட்டார் பவானி. தலையில் ஏற்பட்ட காயம், அதிக ரத்தம் வெளியேறியது ஆகிய காரணங்களால் டாக்டர்களால் பவானியை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.