சபரிமலை யாத்திரை... 12 நாட்களில் 13,529 ஐயப்ப பக்தர்கள் மட்டுமே வருகை! வருவாயும் பெரும் பாதிப்பு!
பம்பை: மண்டலபூஜை, மகர பூஜை காலங்களில் சபரிமலைக்கான பக்தர்கள் வருகை இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய அளவு குறைந்துள்ளது. கடந்த 12 நாட்களில் மொத்தம் 13,529 பக்தர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். இதனால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகமாக அனுமதிக்கும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகளுடன்தான் குறைவான எண்ணிக்கையிலேயே சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வார நாட்களில் 1,000 பேரும் வார இறுதி நாட்களில் 2,000 பேர் வீதமும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 12 நாட்களில் சபரிமலைக்கு இதுவரை 13,529 பக்தர்கள் மட்டுமே வருகை தந்துள்ளனர். பம்பைக்கு முன்னதாக நிலக்கல்லில் இதுவரை 39 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது. சபரிமலையில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் சபரிமலை கோவில் வருமானமும் கடந்த் 12 நாட்களில் ரூ2 கோடி மட்டும்தான் கிடைத்திருக்கிறது. கடந்த காலங்களில் இந்த சீசன்களில் சுமார் ரூ40 கோடி முதல் ரூ50 கோடி வருவாய் கிடைத்து வந்தது.
இதனையடுத்து சபரிமலையில் தினந்தோறும் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக மாநில அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.