"ஐடி" தலைநகருக்குப் பக்கத்தில் இப்படி ஒரு அக்கப் போரா?
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளியை விட்டே விலகி விட்டனர். ஏன்?... ஜாதி துவேஷம்.
இந்தப் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை சமைப்பவர் ராதாம்மா என்ற பெண்மணி. இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இந்த ஒரே காரணத்திற்காக இந்த மாணவர்கள் பள்ளியை விட்டு விலகியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும் கூட பிரச்சினை இன்னும் தீராமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ராதாம்மாவும் மன வேதனையுடன்தான் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
கக்கனஹள்ளி ராதாம்மா
கோலார் மாவட்டம் கக்கனஹள்ளி கிராமத்தில் உள்ளது அரசு தொடக்கப் பள்ளி. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படித்து வந்தனர். இங்கு மதிய உணவு சமைக்கும் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருபவர் ராதாம்மா.
தலித் பெண்
ராதாம்மா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இதுதான் பிரச்சினையாகி விட்டது. ஒரு தலித் பெண் சமைத்துத் தருவதை நமது பிள்ளைகள் சாப்பிடுவதா என்ற ஜாதி துவேஷம் கொண்ட பெற்றோர் பலர் தங்களது பிள்ளைகளை மதிய உணவு சாப்பிட தடை விதித்தனர்.
பள்ளியை விட்டு விலகல்
ஆனால் கண்டிப்பாக மதிய உணவு சாப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதால் பலர் தங்களது பிள்ளைகளையே பள்ளியை விட்டு விலக்கி வேறு பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இப்படியாக இதுவரை 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விலகியுள்ளனராம்.
18 பேர்தான்
தற்போது இந்தப் பள்ளியில் படித்து வருவது வெறும் 18 பேர் மட்டுமே. அதிலும் கூட 5 பேர் மட்டும்தான் மதிய உணவைச் சாப்பிடுகின்றனர். மற்றவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
கண்ணீருடன் ராதாம்மா
இதுகுறித்து ராதாம்மா கூறுகையில், நான் 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் பள்ளியில் சமையல் கலைஞராக சேர்ந்தேன். அன்று முதல் இந்தப் பிரச்சினை நீடிக்கிறது.
எதுவுமே சாப்பிட மாட்டார்கள்
குழந்தைகளுக்கு நான் பால் காய்ச்சிக் கொடுத்தாலும் குடிக்க மாட்டார்கள். சாப்பாடு சமைத்தால் அதைச் சாப்பிட மாட்டார்கள். நான் எது கொடுத்தாலும் சாப்பிடக் கூடாது என்று பெற்றோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
ஜாதிப் பிரச்சினை இல்லையாம்
இந்த விவகாரம் குறித்து பள்ளியின் பொறுப்பாளரான வெங்கடாச்சலபதி என்பவர் கூறுகையில், இது ஜாதிப் பிரச்சினை கிடையாது. கிராமத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட பூசல்தான் காரணம் என்று இவர் கூறுகிறார்.
"ஐடி" தலைநகருக்குப் பக்கத்தில் இப்படி ஒரு அக்கப் போரா?