மதவாதத்தை தூண்டி விடும் சக்திகளை மாநில அரசுகள் ஒடுக்க வேண்டும்- பிரதமர்
டெல்லியில் இன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...
மதக் கலவரங்களை ஒடுக்குவதில்தான் மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். மத வாத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அவர்கள் எந்த அரசியல் இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தாலும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் ஒடுக்க வேண்டும்.
முஸாபர் நகரில் நடந்த கலவரத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது கவலைக்குரியதாகும்.
அதேபோல ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார், பீகாரின் நவதா, ஹைதராபாத் போன்ற நகரங்களில் மதக் கலவரங்கள் மூண்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாவே இவை அதிகரித்து வருகின்றன.
உ.பியில்தான் கடந்த சில மாதங்களில் அதிக அளவில் மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இதன் மூலம் தேச விரோத சக்திகள் மதவாத பிரிவினையை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்தும் செயலில் வெற்றி பெற்று வருவதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது ஜனநாயக அமைப்புகளை இது சிதைத்து விடும். இதற்கு எதிராக உறுதியுடன் செயல்பட நாம் உறுதி பூண வேண்டும்.
மதக் கலவரங்கள் உள்ளிட்டவற்றுக்கு அரசியல் சாயம் பூச அரசியல் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயலக் கூடாது. அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முனையக் கூடாது. அதேபோல சோஷியல் மீடியாக்கள் மூலம் மத துவேஷத்தைப் பரப்புவதையும் நாம் அனுமதிக்க முடியாது, கூடாது என்றார் அவர்.