மகனோடு சேர்ந்து கம்பெனி தொடங்க சொன்னார் உம்மன்சாண்டி... மீண்டும் போட்டு தாக்கும் சரிதா நாயர்
திருவனந்தபுரம்: கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் பெண் தொழிலதிபர் சரிதா நாயர் விசாரணை கமிஷன் முன் அளித்து வரும் வாக்குமூலங்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன. கேரளா முதல்வர் உம்மன்சாண்டி தன்னுடைய மகனுடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றை தொடங்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டதாக இன்று சரிதா நாயர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கான சோலார் பேனல்களை அமைத்து தருவதாக கூறி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தனர் கேரளா பெண் தொழிலதிபர் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் என்பது குற்றச்சாட்டு. இதில் சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.
இந்த மோசடியில் கேரளா முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சரிதாநாயருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த மோசடி குறித்து நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இக்கமிஷன் முன்பு நேரில் ஆஜராகி சரிதா நாயர் அளித்து வரும் வாக்குமூலங்கள் கேரளா அரசியலில் பெரும் புயலாக வீசி வருகிறது. குறிப்பாக முதல்வர் உம்மன்சாண்டிக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் வாக்குமூலம் கொடுத்த பின்னர் உம்மன்சாண்டி பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சரிதா நாயரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சூர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், உம்மன்சாண்டி மீது எப்ஐஆர் போட உத்தரவிட்டது. இதனால் உம்மன் சாண்டி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று இடதுசாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனிடையே இன்றும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பாக சரிதா நாயர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதில், உம்மன்சாண்டி தன்னுடைய மகன் சாண்டி உம்மனுடன் இணணந்து கம்பெனி ஒன்றை தொடங்குமாறு கேட்டுக் கொண்டார். உம்மன்சாண்டி மகனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுடன் வெளிநாடுகளுக்கும் அவர் சென்றதற்கு ஆதாரங்கள் இருக்கிறது.. அந்த பெண்ணும் சோலார் பேனல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் எனக் கூறியிருக்கிறார்.
"எனது மகனுக்கும் சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் கிடையாது" என்று ஏற்கனவே உம்மன்சாண்டி விளக்கம் அளித்துள்ள நிலையில் சரிதா நாயரின் புதிய வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.