நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம்; தமிழகத்துக்கு உரிமையில்லை: உம்மன் சாண்டி
கொச்சி: முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய 4 அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். இதில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை, எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமையன்று கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கேரளாவில் உள்ள, முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும், தமிழகத்துக்கு சொந்தம் என, அம்மாநில முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்; இது, தவறு.
இந்த அணைகளை பராமரிக்கும் பொறுப்பு, தமிழக அரசிடம் இருந்தாலும், அந்த மாநிலம், இந்த அணைகளுக்கு உரிமை கோர முடியாது. நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடமில்லை என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள சட்டசபையில், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ., ஜமீலா பிரகாசம் பேசியபோது, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடந்த அணைகள் பாதுகாப்புக்கான தேசிய குழு கூட்டத்தில், 'முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய, நான்கு அணைகளின் முழு உரிமையும், எங்களுக்கே சொந்தம்' என, தமிழகம் வாதிட்டது.
இதற்கு, கேரள அதிகாரிகள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், தமிழகத்தின் வேண்டுகோளை, அணைகள் பாதுகாப்பிற்கான தேசியக் குழு ஏற்றுக்கொண்டு விட்டது. 'பரம்பிக்குளம் ஆழியாறு கூட்டு அணைத்திட்டத்தின் கீழ், பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகளின் பராமரிப்பை, தமிழகம் செய்து வருவதால், கேரள அணைகள் பாதுகாப்பு ஆணையம், அங்கு ஆய்வு செய்ய தேவையில்லை' என, தமிழக அரசு தரப்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறினார்.
இதனால், கேரள சட்டசபையில், கடும் அமளி ஏற்பட்டது. முதல்வர் உம்மன்சாண்டி தலையிட்டு, 'கேரள மாநிலத்தின் நலன்களுக்கு எதிராக, யாராவது செயல்பட்டிருந்தால், அவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறினார். கேரள சட்டசபையில், தெரிவிக்கப்பட்ட கருத்துகள், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் உம்மன்சாண்டி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.