மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார் மோடி.. உம்மன் சாண்டி கடும் தாக்கு
பிரதமர் மோடி மக்களை பிச்சைக்காரர்களாக்கி தெருத் தெருவாக பணத்தைத் தேடி அலைய வைத்து விட்டார் என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரம்: கருப்புப் பணம் வைத்துள்ள யாரும் இன்று வங்கிகளுக்கு வந்து பணத்துடன் நிற்கவில்லை. மாறாக, பாமர மக்கள்தான் தெருத் தெருவாக பணம் எடுக்க அலைந்து கொண்டுள்ளனர். மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார் மோடி என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு சிரமமு்ம், பீதியும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்து விட்டது.
பிரதமர் மோடியின் இந்த நள்ளிரவு அட்டாக் காரணமாக பொதுமக்கள் பிச்சைக்காரர்கள் ஆகி விட்டார்கள். போர்க்காலங்களில் கூட நமது நாடு இந்தளவுக்கு மோசமான நிலைக்கு சென்றது இல்லை.
கருப்பு பணம் பதுக்கியவர்களை சிக்க வைக்கப்பதற்காகவும், கள்ள நோட்டுகளை தடுப்பதற்காகவும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஓத்துழைக்க தயாராக உள்ளனர். ஆனால் ஒரு நல்ல திட்டத்தை மிகவும் தவறான முறையில் செயல்படுத்தினால் அதற்கு விபரீத விளைவுகள் தான் ஏற்படும். அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணம் கிடைக்காமல் வங்கிகளை அடி்த்து நொறுக்கி வருகின்றனர். பிரதமரின் இந்த நடவடிக்கை காரணமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் ஒருவர் கூட வங்கி முன் வரிசையில் நிற்கவில்லை. மிகவும் சிரமப்பட்டு செலவினங்களை சமாளித்து சேமித்து வைத்துள்ள பாமர மக்கள் தான் வங்கி முன் கால்கடுக்க நிற்கின்றனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார் சாண்டி.