மலைத் தொடரில் 200 கோடி செலவில் ஆடம்பர திருமணம்.. விருந்தினர்கள் பயன்படுத்தியதோ திறந்தவெளி கழிப்பறை
Recommended Video
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஆலி ஸ்கை ரிசார்டில் ரூ 200 கோடி செலவில் ஆடம்பரமாக திருமணம் செய்த குடும்பத்தினர் குப்பைகளை சுத்தம் செய்யாமல் விட்டதோடு திறந்தவெளி கழிவறையை பயன்படுத்தியது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
டேராடூனில் மலை பகுதியில் உள்ளது ஆலி ஸ்கை ரிசார்ட். இது மிகப் பெரிய சுற்றுலா தலமாகும். இங்கு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த தொழிலதிபர்களான குப்தா சகோதரர்களின் இல்லத் திருமணம் கடந்த வாரம் நடந்தது. இங்கு திருமணம் நடத்த நைனிடால் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த திருமணத்தை 13 அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணித்து மொத்த நிகழ்ச்சியையும் வீடியோவாக எடுக்கவும் கோர்ட் அறிவுறுத்தியிருந்தது.
டெபாசிட் தொகை
இந்த திருமணத்துக்காக குப்தா சகோதரர்கள் அந்த நகராட்சியிடம் ரூ. 5.54 லட்சத்தை செலுத்தியுள்ளனர். அதில் ரூ 54 ஆயிரம் பயன்பாட்டு கட்டணமும் அடங்கும். அத்துடன் டெபாசிட் தொகையாக ரூ 3 கோடியையும் செலுத்தியுள்ளனர்.
பாபா ராம்தேவ்
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி இந்த திருமணத்தில் 150 விருந்தினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கார் மூலம்
இந்த ஆலி மலைத்தொடருக்கு செல்ல ஹெலிகாப்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே திருமண நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டு அவர்கள் ரவிகிராம் அருகே அமைக்கப்பட்ட ஓடுதளத்தில் இறக்கிவிடப்பட்டு பின்னர் கார் மூலம் திருமணம் நடைபெறும் இடத்துக்கு சென்றனர்.
உணவுக் கழிவுகள்
இந்த நிலையில் திருமணம் முடிவடைந்தவுடன் டெபாசிட் தொகையை திருப்பிக் கொடுப்பதற்காக ஆலி மலைத்தொடருக்கு சென்ற நகராட்சி அலுவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலை முழுவதும் குப்பை கூளங்கள், உணவு கழிவுகள் காணப்பட்டன.
2.5 லட்சம் அபராதம்
அது மட்டுமல்லாமல் ரூ. 200 கோடியில் செய்யப்பட்ட திருமணத்தில் பெரும்பாலானோர் திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தியிருந்தது அதிர்ச்சியிலும் அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் குப்பைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றதற்கு சாமோலி மாவட்ட நிர்வாகம் 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
321 குவிண்டால்
இதில் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழித்ததற்கு ரூ. 1 லட்சமும், ஆங்காங்கே குப்பைகளை போட்டதற்கு ரூ. 1.5 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் நடந்த இடத்திலிருந்து 321 குவிண்டால் குப்பையை ஜோதிமத் மாநகராட்சி அகற்றியுள்ளது.
|
நைனிடால் உயர்நீதிமன்றம்
இந்த அபராதத் தொகைகளை விரைவில் செலுத்திவிடுவதாக குப்தா சகோதரர்கள் உறுதியளித்துள்ளனர். அவர்கள் செலுத்திய ரூ 3 கோடி டெபாசிட் தொகையை திருப்பி தருவது குறித்து வரும் 8-ஆம் தேதி நைனிடால் உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும்.