'டுபாக்கூர்' சாமியார் ராம்பாலை கைது செய்த "ஆபரேஷ"னுக்கு செலவு ரூ.26.61 கோடி!
சண்டிகர்: சர்ச்சை சாமியார் ராம்பாலை கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு ரூ. 26.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா மாநில சர்ச்சை சாமியார் ராம்பால் 2006-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். அதில் ஜாமீனில் வந்த நிலையில், அவர் மீது பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
அதில் அவர் ஆஜர் ஆகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பித்து, கடந்த 21-ந் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என ஹரியானா போலீசுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போலீசார் மீது தாக்குதல்
இதையடுத்து ஆசிரமத்தை சுற்றி வளைத்து சாமியாரை கைது செய்வதற்கு போலீஸ் படை அங்கு விரைந்தது. ஆனால் ஆசிரமத்திற்குள் இருந்து சாமியார் ஆதரவு குண்டர் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், பெட்ரோல் குண்டுகளை வீசினர். சரமாரியாக கற்களும் வீசப்பட்டன.
6 பேர் பலி
இந்த நிலையில் ஆசிரமத்தில் சாமியாரால் மனித கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த 5 பெண்கள், ஒரு குழந்தை என 6 பேர் உயிரிழந்தது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக, சாமியார் ராம்பாலை துணை ராணுவத்தின் உதவியுடன் போலீசார் கடந்த 19ந் தேதி கைது செய்தனர்.
அறிக்கை தாக்கல்
இதனையடுத்து கடந்த 20ந் தேதி போலீஸ் காவலுக்கு அனுப்பட்ட சாமியார் ராம்பால் பலத்த பாதுகாப்புடன் இன்று பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏற்கனவே சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. இதன்படி ஹிசார் ஆசிரமத்தில் சாமியாரை கைது செய்ய நடத்தப்பட்ட நடவடிக்கை தொடர்பான விரிவான அறிக்கையை ஹரியானா டி.ஜி.பி. எஸ்.என். வசிஷ்த் தாக்கல் செய்தார்.
ரூ26.61 கோடி
அதில், ராம்பாலை கைது செய்ய மொத்தம் ரூ. ரூ. 26.61 கோடி செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹரியானா மாநில அரசு ரூ. 15.43 கோடி, பஞ்சாப் மாநில அரசு ரூ. 4.34 கோடி, சண்டிகார் நிர்வாகம் ரூ. 3.29 கோடி, மத்திய அரசு ரூ. 3.55 கோடி என மொத்தம் 26.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை செலவு வேற.. தனியா
காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு ஆன செலவு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம், காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
909 பேர் குறித்து விசாரணை
சாமியார் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட 909 பேர் குறித்து விசாரிக்கவும், கைது செய்யப்பட்டவர்கள், காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர்களா இல்லை, முன்னாள் படைவீரரா என்பது குறித்து தெரிந்துக் கொள்ளவும் காவல்துறையிடம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.