பதன்கோட் விமானதளத்தில் ஊடுருவிய 6 தீவிரவாதிகளும் சுட்டுக்கொலை! 3வது நாளில் முடிவுக்கு வந்த ஆபரேசன்
சண்டிகர்: பதன்கோட்டில் 3வது நாளாக இன்றும் தேடுதல் வேட்டையை தொடர்ந்த ராணுவம் அனைத்து தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்று, விமானதளத்தை மீட்டுள்ளது.
நேற்று இரவு தேடுதலை நிறுத்தியிருந்த ராணுவம் இன்றுகாலை முதல் தொடர்ந்த நிலையில், மாலை 4 மணியளவில் ஆபரேசன் முற்று பெற்றது.
பதன்கோட் விமானப்படை தளத்தில், 3வது நாளாக இன்று காலை 8.30 மணியளவில் தேடுதல் வேட்டையை ராணுவம் தொடங்கியது. ஏற்கனவே, 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், லெப்டினன்ட் கர்னல், நிரஜ்ஜன் குமார் உட்பட 7 ராணுவ வீரர்கள், வீர மரணம் அடைந்திருந்தனர்.
மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இன்றும், பதன்கோட் விமானப்படை தளத்தில் தேடுதல் வேட்டை நடந்தது.
சுற்றிலும், மரங்கள் அடர்ந்த 2000 ஏக்கர் பகுதி என்பதால், படையினர் காலை வேளையில் தேடுதலை தொடங்கினர். ராணுவ தரப்பில் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக, அவசரப்படாமல் ஆபரேசன் நடந்ததாக கூறப்பட்டது.
இதனிடையே காலை 10.30 மணியளவில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. 2 முறை வெடிகுண்டு வெடித்த சத்தமும் கேட்டுள்ளது.
இதனிடையே மாலை 4 மணியளவில் ஆபரேசன் முடிவுக்கு வந்துள்ளது. மேலும் 2 தீவிரவாதிகள் சடலங்களும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ஊடுருவிய ஆறு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருப்பினும், விமானப்படை தளம் இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.