லலித் மோடிக்கு ஆதரவாக வசுந்தரராஜே கடிதம்.. அம்பலப்படுத்தியது காங்கிரஸ்- ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!
டெல்லி: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி விசா பெற உதவ ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா எழுதிய கடிதத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதல்வர் பதவியை வசுந்தரராஜே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐ.பி.எல். நிதி மோசடியில் சிக்கி தற்போது இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக இருக்கிறார் லலித் மோடி. அங்கிருந்து போர்ச்சுக்கல் நாட்டுக்கு அவர் செல்வதற்கு மத்திய வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் உதவினார்கள் என்பது பெரும் சர்ச்சையானது.
மனிதாபிமான அடிப்படையில் லலித் மோடிக்கு உதவியாக சுஷ்மா ஸ்வராஜ் கூறி உள்ளார். ஆனால், தான் அப்படி உதவி எதுவும் செய்யவில்லை என்று வசுந்தரா ராஜே கூறி உள்ளார்.
இந்த நிலையில் லலித் மோடிக்கு விசா வழங்கக் கோரி, வசுந்தரா ராஜே எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.
18.8.2011-ந் தேதியிட்ட அந்த கடிதத்தில் லலித் மோடிக்கு விசா வழங்க ஆதரவாக வசுந்தரா ராஜே எழுதி இருப்பதோடு, தான் இவ்வாறு உதவி செய்வது பற்றி இந்திய அரசுக்கு தெரியக்கூடாது என்று குறிப்பிட்டு இருப்பதாகவும், அதில் கையெழுத்திட்டு இருப்பதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
தம் மீதான குற்றச்சாட்டை வசுந்தரா ராஜே முன்பு மறுத்த போதிலும் இப்போது ரகசியம் வெளியாகிவிட்டது என்று கூறிய ஜெய்ராம் ரமேஷ் அவர் ராஜினமா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் குறிப்பிட்டார்.