நம்ம கபில்தேவா இப்படி செஞ்சார்.. நம்பவே முடியலையே!
டெல்லி: கபில்தேவ் ஒரு சந்தர்ப்பவாதி. என்னுடன் உள்ள பழைய பகையை மனதில் வைத்து இந்திய ஹாக்கி வீரர்களின் வாழ்க்கையில் விளையாடி விட்டார். அர்ஜூனா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு ஹாக்கி வீரரைக் கூட அவர் தேர்ந்தெடுக்கவில்லை என்று அர்ஜூனா விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியின் தலைவராக இருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் மீது பாய்ந்துள்ளார் ஹாக்கி இந்தியா அமைப்பின் செயலாளர் நரீந்தர் பத்ரா.
அர்ஜூனா விருதுக்கு 7 ஹாக்கி வீரர்களைப் பரிந்துரைத்ததாகவும், அவர்களில் யாரையுமே கபில் தேவ் தேர்வு செய்யவில்லை என்றும் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார். இது பச்சை சந்தர்ப்பவாதம் என்றும் அவர் கபில்தேவை விமர்சித்துள்ளார்.
அர்ஜூனா விருதுக்கு 15 வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் மேற்கொண்டு யாரையும் சேர்க்கத் தேவையில்லை என்று கபில் தேவ் தலைமையிலான விருதுக் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதையடுத்து இப்படி விமர்சித்துள்ளார் பத்ரா.
பத்ராவின் பாய்ச்சல்
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஹரியானா மற்றும் புவனேஸ்வரில் ஹாக்கி ஸ்டேடியங்களில் விளக்கொளி ஏற்பாடு செய்வதற்கான காண்டிராக்டைத் தருமாறு கபில்தேவின் தேவ் முஸ்கோ நிறுவனம் கோரியிருந்தது. அதை நான் நிராகரித்ததால் கோபத்தில் இருந்து வரும் கபில் தேவ் இப்போது சமயம் பார்த்து பழி தீர்த்து விட்டார். இப்போது என்னைப் பார்த்து ஹூ இஸ் பத்ரா என்று கேட்கிறார்.
"ஹூ இஸ் பத்ரா"
டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானம் மறு சீரமைக்கப்பட்டபோது, இந்த "ஹூ இஸ் பத்ரா"விடம் வந்த கபில்தேவ், தேவ் முஸ்கோ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தர வேண்டும் என்று என்னிடம் வேண்டிக் கொண்டார்.
உறுதியளித்த "ஹூ இஸ் பத்ரா"
அப்போது இந்த "ஹூ இஸ் பத்ரா", கபில் தேவிடம் குறைந்த தொகையை நிர்ணயித்துள்ள ஜிஇ, பிலிப்ஸ், பஜாஜ் மற்றும் தேவ் முஸ்கோ நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
பாட்டியாவிடம் கொடுங்க
அதன் பின்னர் மான்செஸ்டரிலிருந்து கபில் தேவ் இந்த "ஹூ இஸ் பத்ரா"வுக்கு மெயில் அனுப்பினார். அதில், தனது நண்பரான பாட்டியா என்பவரிடம் தேவ் முஸ்கோ நிறுவனத்திற்கு ஆர்டரை வழங்குவது தொடர்பாக உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
ஆனால்...
ஆனால் அதன் பின்னர் 2013ம் ஆண்டு ஹாக்கி இந்திய லீக் போட்டிகளை நாங்கள் ஆரம்பித்தபோது அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகளை ஸ்டேடியத்தில் நிறுவத் திட்டமிட்டோம். இதற்காக தேவ் முஸ்கோ நிறுவனத்தை அணுகியபோது, அவர்கள் மற்றவர்களை விட பல மடங்கு அதிக தொகையை கேட்டனர். எனவே நாங்கள் அதை விட்டு விட்டு பிற நிறுவனங்களை அணுக முடிவு செய்தோம்.
சாதகமாக நடக்க வலியுறுத்தல்
அதன் பின்னர் புவனேஸ்வர், ஜிந்த், ஹிஸ்ஸார், ரோதக் நகரில் உள்ள ஹாக்கி ஸ்டேடியங்களில் விளக்கொளி ஏற்பாடு செய்ய தனது நிறுவனத்திற்கு சாதகமாக நடக்குமாறு கபில் தேவ் விரும்பினார். ஆனால் அதை நான் நிராகரித்து விட்டேன்.
மரியாதைக்குரியவராக நடக்கவில்லையே
கபில்தேவ் மரியாதைக்குரிய ஒரு வீரர். ஆனால் அவருக்கு செலக்டிவ் அம்னீஷியா நோய் உள்ளது. என்னிடம் பழி தீர்க்க அவர் விரும்பினால் அதை நேரடியாக செய்திருக்கலாம். ஆனால் 7 ஹாக்கி வீரர்களிடம் அதைக் காட்டியுள்ளார்.
பிராடு குலாத்தி
ஹாக்கி குறித்த அறிவு கொஞ்சம் கூட இல்லா, பிராடு நிபுணரான அனுபம் குலாத்தி சொல் பேச்சைக் கேட்டு செயல்பட்டுள்ளார் கபில் தேவ்.
கஷ்டப்பட்டு போராடி வந்த வீரர்கள்
இந்த ஏழு ஹாக்கி வீரர்களும் தேசிய அளவில் கடுமையாக போராடி, கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள். ஆனால் மரியாதைக்குரிய கபில்தேவ் இப்படி அவர்களை அவமானப்படுத்தியுள்ளது கடுமையான கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் பத்ரா.
ஆர்டிஐ அம்பு
தற்போது பத்ரா, ஆர்டிஐ மூலம் அர்ஜூனா விருதுத் தேர்வு முறை குறித்த விவரங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.