பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்த்தால் அது மாபெரும் குற்றம்?.. கெஜ்ரிவால் ஆவேசம்
டெல்லி: கொலை, பலாத்காரம் இதெல்லாம் குற்றமில்லை, பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்.,யும் எதிர்ப்பது தான் மிகப்பெரிய குற்றம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோபமாக கூறியுள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக, மாணவர்கள் தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதும், தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜகவினரின் வழக்குப் போட்டு அதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் ஏற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கன்யா குமார், கடந்த 15-ம் தேதி அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அருண் ஜெட்லி அவதூறு வழக்கு தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. ஒ பி சர்மா அங்கு வந்திருந்தார். அப்போது அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவரை தாக்கினார் என்றும் வீடியோ காட்சிகள் வெளியானது.
இது தொடர்பாக சர்மாவைப் போலீசார் கைது செய்தனர். ஆனால், 8 மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சர்மா, "பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவதை யாராவது தடுத்தால், இதனை அனுபவிக்க வேண்டும், இதைத் தவிர சொல்வதற்கு என்னிடம் வேறு எதுவும் இல்லை," என்றார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சர்மாவிற்கு உணவகத்தில் இருந்து தனியாக 'வெஜ்டபிள்' உணவு வாங்கி செல்லப்பட்டது என்றும், காபி வாங்கித் தரப்பட்டது என்றும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
Centre's new IPC- rape, murder or beat anyone. When questioned, just say that victim was shouting anti-India slogans, u will be let off(2/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 19, 2016
இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
Centre's new IPC- it's not a crime to murder, rape or beat anyone if u r from BJP. Being opposed to BJP n RSS is biggest crime now(1/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 19, 2016
அதில் அவர், "மத்திய அரசின் புதிய ஐபிசி என்பது நீங்கள் பாஜகவைச் சேர்ந்தவராக இருந்தால் கொலை, பலாத்காரம் அல்லது யாரையாவது தாக்கினால் அது குற்றம் ஆகாது. மாறாக பாஜகவையும் ஆர்எஸ்எஸ்.,ஐயும் எதிர்ப்பது தான் மிகப் பெரிய குற்றம்.
இதுதான் மத்திய அரசு புதிய சட்டம். அதனை எதிர்த்து கேள்வி கேட்டால், அவர்களை இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டார்கள் எனக் கூறி கைது செய்து விடுவார்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.