மானியம் பெற ஆதார் எண் கட்டாயம்.. ஆனா இல்ல.. மத்திய அமைச்சர்களால் ராஜ்யசபாவில் குழப்பம்
டெல்லி: மானியங்களை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று மத்திய அரசு கூறியபோதிலும், அதிலும் ஒரு இழுவையை சேர்த்துள்ளது.
காஸ் மற்றும் ரேஷன் பொருட்கள் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயமாக்க உத்தரவிட்ட மத்திய அரசு, ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.
நேற்று மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் கிளப்பின. சமாஜ்வாடி எம்பி நரேஷ் அகர்வால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், பிஜூ ஜனதா தளம் உறுப்பினர் திலீப் திர்க்கே ஆகியோர் விதி 267ன் படி கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ்படி ஆதார் பற்றி உடனே விவாதிக்க வேண்டும் என்று அவை தொடங்கியதும் கோரிக்கை விடுத்தனர்.
நிறுத்த உத்தரவு
விவாதத்தில் பேசிய, சமாஜ்வாடி எம்.பி, ராம்கோபால்யாதவ் (சமாஜ்வாடி): ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், ஓய்வூதியம், காஸ் மானியம் உள்ளிட்டவற்றை நிறுத்தும்படி மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
40 சதவீத மக்களிடம் இல்லை
நமது நாட்டில் 40 சதவீத மக்கள் ஆதார் அட்டையை இன்னும் பெறவில்லை. அவர்கள் அனைவரும் அரசின் இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார்.
கூட்டாட்சி இதுவா
டெரிக் ஓபிரையன் கூறுகையில், மத்திய அரசு கூட்டாட்சியை பற்றி பேசுகிறது. ஆனால் மாநிலங்களை ஆலோசிக்காமல் முடிவுகளை தனியே எடுக்கிறது. ஆதார் எண் கட்டாயம் என்பது இந்தியா முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.
கட்டாயம் இல்லை என்கிறார் வெங்கையா
இவ்வாறு உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளித்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில், ஆதார் எண் வழியாக அரசு மானியங்களை பெற வசதியாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேறி உள்ளது.
இருப்பினும் உறுப்பினர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும். ஆதார் எண் கட்டாயமில்லை. ஒருவேளை தேவைப்பட்டால், அந்த சமயத்தில் தேவையான உத்தரவுகள் வழங்கப்படும் என்றார்.
3 மாதத்தில் கட்டாயம் என்கிறார் பிரதான்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ஆதார் எண் இல்லாதவர்களை அடுத்த 3 மாதத்திற்குள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகே அவர்களது காஸ் மானியம் தனியாக நிறுத்தி வைக்கப்படும். இது முற்றிலும் தடை அல்ல. தற்போது 85 சதவீதம் மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களை எடுக்க மாநில அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றார். மத்திய அமைச்சர்கள் இருவரும் உறுதியான ஒரு தகவலை தெரிவிக்காததால் அமளி நீடித்தது.