கத்காரி விலகக் கோரி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு.. 5 முறை அவை ஒத்திவைப்பு
டெல்லி: மத்திய அமைச்சசர் நிதின் கத்காரிக்குச் சொந்தமான பூர்த்தி குழுமம் என்ற நிறுவனத்தின் நிதி முறைகேடுகள் குறித்த சிஏஜி அறிக்கையை முன்வைத்து ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் பெரும் அமளியை ஏற்படுத்தின. இதனால் 5 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிதி முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கத்காரி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த விவகாரம் தொடர்பாக கத்காரி விளக்கம் அளிக்க முயன்றபோதும் அதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மாறாக அவர் விலகியே தீர வேண்டும் என்று ஒரே குரலில் அவை வலியுறுத்தின.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி வலியுறுத்திப் பேசினார். அவர் கூறுகையில், ‘நிதின் கத்காரியின் பூர்த்தி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிஏஜி கூறியுள்ளது. கத்காரிக்கும் இந்த ஊழலில் தொடர்பு உள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும்' என வலியுறுத்தினார்.
தனது கருத்தை அவையில் வெளியிட முடியததால் பின்னர் தனது கருத்தை டிவிட்டரில் வெளியிட்டார் கத்காரி.