நவம்பர் 8ல் தேசிய அளவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மாபெரும் போராட்டம் ?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து நவ,.8-ல் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளன.
டெல்லி : மத்திய அரசைக் கண்டித்து நவம்பர் 8ம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பு நீக்கம் செய்தது. அதனால் ஒரே நாள் இரவில் 15 லட்சம் கோடி ரூபாய் செல்லாதவை ஆகிப்போனது.
இதில் ஏழை எளிய நடுத்தர மக்களும், சிறு மற்றும் குறு வியாபாரிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இப்போது வரையிலும் அதில் இருந்து மீண்டதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வருகிற எட்டாம் தேதியோடு இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகப்போகிறது. இதை இன்னமும் எதிர்க்கட்சிகள் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது.
இதில் முக்கிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, பொருளாதார பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் வரும் நவம்பர் 8ம் தேதி தேசிய அளவில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.