பாஜகவை மெர்சலாக்கிய எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட "மும்பை சங்கமம்"
மும்பையில் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரமாண்ட அமைதிப் பேரணியை நடத்தினர்.
மும்பை: லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என்கிற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் மும்பையில் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நடத்திய பிரமாண்ட அமைதிப் பேரணி பாஜகவை கதிகலங்க வைத்திருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை மத்திய அரசு எப்போது வேண்டும் வெளியிடக் கூடும் என்கிற அசாதாரண நிலை உருவாகி உள்ளது. பாஜக ஏன் முன்கூட்டியே தேர்தலை நடத்த முயற்சிக்கிறது என்பது தொடர்பான வாதங்கள் அனல் பறக்கின்றன.
இந்நிலையில் மும்பையில் வெள்ளிக்கிழமையன்று குடியரசு தின நாளில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிபிஐ தேசிய செயலர் டி. ராஜா, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, போட்டி ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத்யாதவ், காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவாண், பிரித்விராஜ் சவாண், சுஷில்குமார் ஷிண்டே, ஸ்வபிமானி நிறுவானர் ராஜூ ஷெட்டி, திரிணாமுல் காங்கிரஸின் தினேஷ் திரிவேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தலித் தலைவரும் குஜராத் எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி, பட்டேல்கள் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, சமூக ஆர்வலர் பாபா ஆதவ், மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி ஆகியோரும் இப்பேரணியில் பங்கேற்றனர். 'அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து மும்பை பல்கலைக் கழகம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து இந்தியா கேட் வரை இந்த அமைதிப் பேரணி நடைபெற்றது.
சரத்பவார் முயற்சியில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஓரணியில் திரண்டிருப்பது பாஜகவுக்கு பீதியூட்டியுள்ளது. அதுவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி இருக்கிறது; தெலுங்குதேசம் வெளியேற இருக்கிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.