தீபக் மிஸ்ராவை நீக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை... வெங்கய்ய நாயுடுவிடம் இம்பீச்மென்ட் மனு அளிப்பு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சியினர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் மனு அளித்துள்ளனர்.
டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 7 எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து மனு அளித்துள்ளனர். தீபக் மிஸ்ராவிற்கு எதிராக 67 எம்பிகள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சியினர் குடியரசு துணைத்தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கய்ய நாயுடுவை அவருடைய இல்லத்தில் இன்று சந்தித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான இம்பீச்மென்ட் மனுவில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 67 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நேற்று உத்தரவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகள் இந்த இம்பீச்மென்ட் மனுவை வெங்கய்ய நாயுடுவிடம் அளித்துள்ளனர்.
சோராபுதீன் ஷா என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்தவர் நீதிபதி லோயா, இந்த வழக்கில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவும்குற்றம்சாட்டப்பட்டிருந்தார். கடந்த டிசம்பர் 2014ல் நாக்பூரில் திடீர் மாரடைப்பால் லோயா மரணமடைந்த நிலையில், வேறு நீதிபதி நியமிக்கப்பட்டு வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.
பாஜக மறுப்பு
இந்திய நீதித்துறை வரலாற்றில் இது ஒரு சோகமான நாள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது. உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டியுள்ளதாகவும் லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரியதற்கு அமித்ஷா மீதான காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று பாஜக கூறி இருந்தது.
|
வெங்கய்ய நாயுடு வீட்டில் சந்திப்பு‘
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் இன்று காலையில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு வெங்கய்ய நாயுடுவை சந்தித்து மனுவை அளித்துள்ளனர்.
தீபக் மிஸ்ராவிற்கு எதிராக கையெழுத்து
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் எம்.பிக்கள் இம்பீச்மென்ட் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளன. சுமார் 67 எம்.பி.கள் தீபக் மிஸ்ராவிற்கு எதிரான மனுவில் கையெழுத்திட்டுள்ளன.
50 எம்.பிகள் கையெழுத்தே போதுமானது
திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இம்பீச்மென்ட் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்க 50 எம்.பிகளின் கையெழுத்து கிடைத்தாலே போதுமானது, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்காவிட்டாலும் இந்த இம்பீச்மென்ட் தீர்மானம் மீது ராஜ்யசபா தலைவர் இறுதி முடிவெடுக்கலாம். எனவே எதிர்க்கட்சிகள் அளித்துள்ள இம்பீச்மென்ட் தீர்மானத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் ராஜ்யசபா தலைவர் என்பதே அடுத்தகட்ட பரபரப்பாக இருக்கிறது.